google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: மார்ச் 2019

வியாழன், 28 மார்ச், 2019

திருமணமே குருவின் பலத்தினால் தான் தீர்மானிக்கப்படுகிறதா?


மனித சமூகத்தில் நிகழும் மகத்தான காரியங்களில் திருமணமும் ஒன்று. வாழ்வியலின் மறுமலர்ச்சி சின்னம் திருமணம் எனில் அது மிகையில்லை. விரதங்கள், இறைவழிபாடுகளைக் கூட தம்பதியராகச் சேர்ந்து செய்யும் போது பலன்கள் கூடுதலாகின்றன என்கின்றன வேதங்கள். உளவியல் கூட மனிதனுக்கு தயவு, தாட்சண்யம் எனும் தயாள குணங்கள் அதிகமாவது திருமணத்திற்குப் பிறகுதான் என்கின்றன. பிறப்பு, கல்வி, வேலை இதெல்லாம் வாழ்க்கையில் ஃபர்ஸ்ட் இன்னிங்ஸ் என்று வைத்துக் கொண்டால்  அதில் திருமணம் என்பது செகண்ட் இன்னிங்ஸ் என்பதில் சந்தேகமே இல்லை.  ‘‘பொண்ணுக்கு வரன் தேடிக்கிட்டிருக்கேன். ஒன்னும் சரியா தகையல.’’ ‘‘குரு பலன் இன்னும் வரலையே. இப்போ ஏன் ஜாதகத்தை தூக்கிகிட்டு அலையறீங்க. அடுத்த வருஷம் வாங்க’’ என்று ஜோதிடர்கள் உங்களை விரட்டுகிறார்களா. அதென்ன குரு பலன். குருவின் பார்வை. அப்போது திருமணமே குருவின் பலத்தினால்தான் தீர்மானிக்கப்படுகிறதா. மற்ற எட்டு கிரகங்களும் என்ன ஒப்புக்கு சப்பாணியா என்கிற கேள்விகளும் உங்களுக்குள் எழலாம்.  

அப்படியெல்லாம் இல்லை. அந்தந்த கிரகத்திற்குரிய வேலையை அவை செய்கின்றன. ஒன்பது கிரகங்களில் முழுமையான சுப கிரகம் வியாழன் என்றழைக்கப்படும் குரு. மெத்தப் படித்த மேதாவிகளை உருவாக்குபவர் இவர்தான். கற்றல், கற்றுக் கொடுத்தல் இவை இரண்டையும் சரிவர செய்பவரும் இவர்தான். எங்கெல்லாம் அட்சதை போட்டு ஆசிர்வாதம் செய்கிறார்களோ அங்கெல்லாம் இவர் இருப்பார். அவர்களை ஆசிர்வதிக்கச் செய்பவரும் இவர்தான். ஆசி வார்த்தைகள் கூறுபவரின் நாவில் அமர்பவரும் இவர்தான். அப்பேற்பட்ட மகோன்னதமான குருவின் ஆசிர்வாதத்தைத்தான் குரு பலன் என்கிறோம். ஒரு ராசியில் நின்று பார்ப்பதை குரு பார்வை என்றும் வியாழ நோக்கம் என்று அழைக்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். விதைக்கு வீர்யத்தை அளிப்பவராக இருக்கிறார். பட்டுப்போனதை பட்டாக துளிர்க்க செய்வதில் கருணைமுனி. மொட்டுக்களை மலர வைப்பதும் இவரே.

தொன்னூறு என்றால் அதை நூறாக்கி முழுத் திருப்தியை தருவார். காயை கனிய வைப்பார். கண்ணுக்குள் பார்வையாக இருக்கிறார். சொல்லுக்குள் பொருளாய் பொதிந்தவர். உடம்புக்குள் உயிராக உறைபவர். சுக்கிலத்தையும் சுரோணிதத்தையும் கருவாக்குபவர் என்று எல்லாமே குருவின் அருளாலும்,
திருப்பார்வையாலும் தான் நிகழ்கின்றன.  ‘‘முப்பத்திரெண்டு மார்க் எடுத்தான். நான்தான் முப்பத்தஞ்சு போட்டு பாஸ் பண்ணிவிட்டேன்’’ என்று சொல்லும் ஆசிரியருக்கு பின்னால் இருப்பவரே குரு. பெண்ணின் திருமண வயது இன்னது என்று ஆட்டோவில் எழுதியிருக்கலாம். எத்தனை பேருக்கு அந்த வயதில் திருமணமாகிறது. ‘‘இருவத்தேழு வயசாகியும் இன்னும் கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டேன்றாங்க’’ என்று சொல்கிறார் எனில் குருவின் பார்வையும், குருவின் பலனும் வலுவடையவில்லை என்று அர்த்தம்.

எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்ல இடத்தில் திருமணம் முடிய வேண்டுமெனில் இவருடைய அனுமதியும், ஆசியும் தேவை. குரு பார்க்க கோடி நன்மை என்பது மகாவாக்கியம். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் நீச்சமாகவும், வக்கிரமாக இருந்தாலும், எவ்வளவு பலவீனமானாலும் சரி குரு பார்த்துவிட்டால் போதும். தானாக பலம் கிடைத்து விடும். பதப்படுத்துதல், பக்குவமாக்குதல், பலப்படுத்துதல் என்று மூன்று விஷயங்களைத்தான் குருவின் பார்வை செய்கிறது. குழந்தைக்கு முதல் முடி எடுத்து மொட்டை போடுவதற்கு குல தெய்வத்துக்கு செல்கிறோம். இன்னொரு கோணத்தில் பார்த்தால் குல தெய்வம்தான் உங்களுக்கு குருவும் கூட. குல தெய்வத்திற்கு செய் என்று உணர்த்துபவர்தான் குரு. குல தெய்வமே தெரியவில்லை என்கிறீர்களா. குருவின் முழு அம்சமான திருச்செந்தூர் முருகனையே குல தெய்வமாகக் கொள்ளுங்கள். குரு பகவான்தான் முறையற்ற உறவுகளை தடுக்கக் கூடியவர். சம்பிரதாயப்படி திருமணத்தையும் நடத்தி வைப்பவர். இவ்வளவு விஷயங்களும் குருவருளால் நடப்பதால் தான் குரு பலன் வேண்டுமென்று ஜோதிடர் சொல்கிறார்.

_ இன்டர்நெட்டில் இருந்து...

கெட்டி மேளம் கொட்டும் நேரம் எப்போது?


திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிறப்பின் பயன், பிரதான நோக்கமே திருமண பந்தத்தின் மூலமான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. இதில் இருப்பவன், இல்லாதவன், பணம் படைத்தவன், வசதி மிக்கவன், அரசன், ஆண்டி என்கிற பாகுபாடு கிடையாது. இத்தகைய திருமண யோகம், பாக்கியம் சிலருக்கு சரியான வயதில் தானாக அமைந்து விடுகிறது. சிலருக்கு சிறிது முயற்சிகள் மூலம் திருமண பந்தம் ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு மிகத் தீவிர அதீத முயற்சிகளின் பேரில் கூடி வருகிறது. பலருக்கு பல நூற்றுக்கணக்கான ஜாதகங்களைப் பார்த்து, பிரம்மப் பிரயத்தனம் செய்து அதன்பிறகு கல்யாண பாக்கியம் கிடைக்கிறது. இன்றும் சிலர் திருமண பிராப்தம் இல்லாததால் இல்லற வாழ்க்கை கிடைக்காமல் பிரம்மச்சாரிகளாகவும், முதிர் கன்னிகளாகவும் வாழ்க்கை நடத்துகிறார்கள்.

ஏறாத மலை இல்லை, இறங்காத குளம் இல்லை, சுத்தாத கோயில் இல்லை. எல்லா பூஜைகள், விரதங்கள், வழிபாடுகள், பரிகாரங்கள் என எல்லாம் செய்து முடித்தாகி விட்டது. ஒன்றுக்கு பலமுறை குரு பார்வை, குருபலன் வந்து போய்விட்டது. ஜாதகம், கைரேகை, எண்கணிதம், நாடி ஜோதிடம், குறி ஜோதிடம், கிளி ஜோதிடம் வரை எல்லாம் பார்த்தாகி விட்டது. ஆனால், இன்னமும் திருமண பாக்கியம் கூடிவரவில்லையே என எண்ணிலடங்கா பெற்றோர்கள் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் பலருக்கு திருமண பிராப்தம் சுலபத்தில் அமைவதில்லை என்பதை ஆராயும்போது அவரவர் கர்மவினை என்பது மிகவும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. இந்த பிறப்பின் ரகசியம் நம் ஜாதகக் கட்டங்களில் உள்ள கிரக அமைப்புக்களில் மறைந்து கிடக்கிறது.

அமைப்பு, அம்சம், கொடுப்பினை, பாக்கியம், பிராரப்தம் போன்ற சொற்களை நம் மூதாதையர்கள் அடிக்கடி பயன்படுத்துவார்கள். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் காரண காரியங்கள் உண்டு. நிகழ்வுகள் யாவும் நிச்சயிக்கப்பட்டவை. அதற்கேற்ப கிரகங்கள் அந்தந்த தசா காலங்களில் அதற்குரிய பலாபலன்களை தருகின்றன. காலம் ஓர் அருமருந்து, காலம் கிரகங்களின் வசம் என்றால் அது மிகையாகாது. ஜாதகம் என்பது நாம் பிறக்கும் போது அந்த நேரத்தில் நவகிரகங்கள் எந்தெந்த ராசிக்கட்டத்தில், என்ன பலம், அம்சத்துடன் இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வதற்கான கணித முறையாகும். இதன் அடிப்படையில் ஜாதகரின் பிறப்பின் தன்மையையும், யோக, அவயோகங்களையும் நாம் தெரிந்துகொள்ள முடியும். அந்த யோகங்களும், அவயோகங்களும், எந்த அளவு இருக்கும் என்பது சூட்சுமமான விஷயமாகும். அதைத்தான் நாம் அம்சம், பிராரப்தம் என்று சொல்கிறோம்.

ஒருவர் வீடு, நிலம், பிளாட் வாங்குவாரா என்றால் அவரின் ஜாதக அமைப்பு, நேரம், காலம், தசாபுக்தி போன்றவற்றை கணக்கிட்டு நல்ல யோகத்தில் இருந்தால் வீடு வாங்குவார் என்று ஜோதிடர் சொல்வார். அவர் ஒரு வீடு வாங்குவாரா அல்லது 23 வீடுகள் வாங்குவாரா என்பதை உறுதிபடச் சொல்ல முடியாது. ஒருவர் அளப்பரிய நிலத்துக்கு சொந்தக்காரராக இருப்பார். தோட்டம், காப்பி, தேயிலை எஸ்டேட், தோப்புக்கள் என நிலச்சுவான்தாரராக இருப்பார். இப்படி இந்த மண், மனை, வீடு என எல்லா பாக்கியங்களும் அவரவர் பூர்வ கர்ம பிராரப்தப்படி கிடைக்கிறது. இதைத்தான் நாம் வாங்கி வந்த வரம் என்கிறோம். பிராரப்தம் இருந்தால் உனக்கு கிடைக்கும் நடக்கும். இது நம் முன்னோர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் வாக்கு. இந்த விஷயத்தை நம்முடைய தர்ம சாஸ்திரமும் எடுத்துரைக்கிறது. பிராரப்தத்தைப் பற்றி பகவான் ரமணர், காஞ்சி மகா சுவாமிகள் போன்றோர் பல்வேறு சமயங்களில் விளக்கமாக கோடிட்டு காட்டியுள்ளார்கள். ஒருசமயம் பல பக்தர்கள் பகவான் ரமணர் முன்பு அமர்ந்திருந்தார்கள். அப்போது ஒருவருக்கு விக்கல் எடுத்தது. உடனே பகவான் அவருக்கு தண்ணீர் தருமாறு சொன்னார். அதையடுத்து பக்கத்து அறையில் இருந்து ஒருவர் அவருக்கு அருந்த நீர் கொண்டு வந்து கொடுத்தார்.

தண்ணீரை வாங்கி அருந்திய அந்த அன்பர் பகவானைப் பார்த்து, பகவானே தற்போது தான் பிராரப்தத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். இப்போது எனக்கு தண்ணீர் கிடைத்ததும் என் பிராரப்தமோ என்று கேட்டார்.  அதற்கு பகவான் ரமணர் சிறிதும் தாமதிக்காமல் எல்லாமே உன் பிராரப்தப்படிதான் நடக்கின்றன என்று அருளினார். காஞ்சி மகா சுவாமிகளிடம் ஒரு பக்தர், பெரியவா நான் கோயில் கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்தார். அதற்கு மகா சுவாமிகள் உனக்குப் பிராரப்தம் இருந்தால் செய்வாய் என்று சொன்னார். அதன்படி பிற்காலத்தில் அந்த பக்தருக்கு மிகப்பழைய புராதானமான கோயிலை புதுப்பித்து திருப்பணி செய்யும் பாக்கியம் அமைந்தது. அந்தளவிற்கு பிராரப்தம் என்பது இறைவனின் அருட்கொடையாகும். நடக்காதது என்ன முயற்சிக்கினும் நடக்காது, நடப்பது என் தடை செய்யினும் நில்லாது என்பது பகவான் ரமணரின் உபதேச அருள்வாக்காகும்.

திருமணம் நடைபெறும் காலம்

பரிகாரங்கள், விரதங்கள், நேர்த்திக் கடன்கள், பிரார்த்தனைகள் எல்லாம் எந்தக் காலத்திலும் வீண் போகாது. கடவுளுக்காக செலவழிக்கப்படும் பணமும், நேரமும் நிச்சயம் உரிய காலத்தில் பலன் தரும். ஒரு சிலருக்கு உடனே பலன் கிடைக்கிறது. மற்றவர்களுக்கு சிறிது தாமதமாகிறது. இதற்குக் காரணம் அவரவர் ஜாதகக் கட்டத்தில் கிரக அம்சங்கள், சேர்க்கைகள், தசாபுக்திகளாகும். திருமணத்தைப் பொறுத்தவரை அஸ்திவாரம் களத்திர ஸ்தானம் எனப்படும் ஏழாம் இடமும், அதன் அதிபதியுமாகும். அதற்கடுத்து தனம், வாக்கு, குடும்பம் எனப்படும் ஏழாம் இடமும், இரண்டாம் அதிபதியுமாகும். மேலும், பெண்கள் ஜாதகத்தில் ஆயுள் ஸ்தானம் எனும் எட்டாம் இடம், மாங்கல்ய ஸ்தானமாக வருகிறது. ஆக மொத்தத்தில் 2, 7, 8 ஆகிய வீடுகள், ஸ்தானாதிபதிகள் ஒருவரின் திருமண வாழ்க்கைக்கு காரணமாக இருக்கின்றது.

ஏழாம் அதிபதி தசையில், லக்னாதிபதி, இரண்டாம் அதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி ஆகியோர் புக்திகளில் திருமண பாக்கியம் கூடிவரும். இரண்டாம் அதிபதி தசையில், லக்னாதிபதி, ஐந்தாம் அதிபதி, ஒன்பதாம் அதிபதி புக்திகளில் சுபயோகம் உண்டு. ஐந்தாம் அதிபதி தசையில் 2, 4, 5, 7, 9 ஆகிய ஸ்தானங்களின் அதிபதிகளின் புக்திகளில் கல்யாணம் கூடிவரும். ஒன்பதாம் அதிபதி தசையில், லக்னாதிபதி  2, 4, 5, 7ம் அதிபதிகளின் புக்திகளில் சுபபாக்கியம் உண்டு. ராகு, கேது தசை, புக்திகளில் திருமணம் கூடி வராது என்று பொதுவாக சொல்வார்கள். ஆனால் அது தவறான கருத்தாகும். திருமண யோகம் மங்களகரமாக நடக்கும். ராகு, கேது தசா புக்திகளில் 1, 2, 5, 7, 9 ஆகிய கிரகங்களின் தசா புக்திகளில் திருமண பாக்கியம் கிடைக்கும். சந்திரனுக்கு கேந்திரத்திலும், குரு, சுக்கிரன் பார்வை பெற்று இருந்தாலும் கல்யாணம் கூடிவரும்.

கோச்சார கிரக அமைப்பு

கோள் சாரம், கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாற்றங்களை குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி, குரு, ராகுகேது பெயர்ச்சி போன்றவையாகும். இந்த கோச்சார அமைப்பை பார்ப்பது ஜோதிட சாஸ்திரத்தின் ஓர் அங்கமாகும். பலருக்கு பலன் சரியாக இருக்கும். ஒரு சிலருக்கு சரியாக அமையாது. கோச்சார அமைப்பில் குருபலன் இருக்கிறதா என்று எல்லோரும் கேட்பார்கள். அந்தளவிற்கு குருபலன் மிகவும் பிரசித்தமானது. இந்த குரு மாறுவதால் எல்லா மாற்றங்களும் நிகழுவதில்லை. ஜாதக அமைப்பின்படி தசா புக்தி யோகமே நமக்கு சுபயோகத்தை அமைத்து தருகின்றது. ஆகையால் குருபலன் இல்லையே என்ற கவலை வேண்டாம். குரு ஜென்மத்தில் இருந்தாலும் எட்டாம் இடத்தில் இருந்தாலும் குரு பார்வை சுபமாக இருப்பதால் அனுகூலம் உண்டு.
சனியின் கோச்சார அமைப்பிலும் திருமண யோகம் கூடிவரும். பொதுவாக 3, 6, 11ல் சனி சஞ்சரிக்கும் காலங்களில் சுப பலன்களைத் தருவார். குடும்பத்தில் தாய், தந்தைக்கு 7லு சனி நடக்கும்போது விரயச் செலவாக சுபச் செலவுகளை ஏற்படுத்துவார். திருமண வயதில் உள்ளவர்களுக்கு 2, 4 ஆம் வீட்டில் வரும்போது இடமாற்றம் என்ற அமைப்பில் திருமணம் கூடிவரும். ஜாதகக் கட்ட அமைப்பு, யோகம், தோஷம், தற்கால கோச்சார நிலை என்று இருந்தாலும் தசா காலங்கள் என்னும் நேரம், காலம், பிராப்தம் சேரும்போது எல்லாம் சுபமாக கூடிவரும். கெட்டி மேளம் கொட்டும்.

_ இன்டர்நெட்டில் இருந்து...

கல்யாணத்தை நிர்ணயிக்கும் கட்டங்கள்


திருமணம் என்பது ஒவ்வொருவருடைய வாழ்விலும் மிகவும் இன்றியமையாதது. ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அவர்களின் பிரதான நோக்கமே திருமணம் வழியான வம்ச விருத்தியில்தான் இருக்கிறது. மணவாழ்க்கை சிலருக்கு மிக எளிதாக கூடி வந்து விடும். ஒரு சிலருக்கு சிறிது முயற்சி களின் மூலம் நடக்கிறது. பலருக்கு கிரகதோஷ அம்சங்களால் பல ஜாதகங்களை பார்த்து பிரம்மப் பிரயத்தனம் செய்த பிறகு தான் திருமண பந்தம் கூடி வருகிறது. திருமணம் என்றவுடன் பிள்ளையார்சுழி போடுவதுபோல் முதலில் நிற்பது ஜாதகம்தான். கல்யாணப் பேச்சை எடுத்ததுமே. ஜாதகம் பார்த்தாச்சா? கிரக பலன் என்ன சொல்லுது. தோஷம் இருக்கா என்று உற்றார், உறவினர், நண்பர்கள் என மாறி மாறி கேட்பார்கள்.

சிலருக்கு திருமண பிராப்தம் கூடிவராமல் பிரம்மச்சாரிகளாகவும், முதிர் கன்னிகளாகவும் வாழ்க்கை நடத்துகிறார்கள். எல்லா வகையிலும் முயற்சி செய்தாகி விட்டது. பலவகைகளில் ஜோதிடமும் பார்த்தாகி விட்டது. பல முறை குருபலன் வந்து போய் விட்டது. பல கோயில்கள் சுற்றியும், பரிகார பூஜைகள் செய்தும் கல்யாண யோகம் இன்னும் கூடி வரவில்லை என எத்தனையோ பேர் ஏக்கப் பெருமூச்சு விடுகிறார்கள். இதற்கு ஜோதிட சாஸ்திரம் கூறும் தீர்வு என்ன? ஜோதிட சாஸ்திரம் என்பது விஞ்ஞானமும், மெய் ஞானமும் கலந்த ஓர் கலவையாகும். இந்த கலவையை நம் முன்னோர்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தி பலன் அடைந்துள்ளார்கள். ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக அமைப்புகள்தான். அவர்களின் வாழ்வாதாரத்தை தீர்மானிக்கின்றது என்றால் அது மிகையாகாது.

பிராப்தம்  கர்மா

ஜாதகம் என்பது நாம் பிறக்கும்போது நவகிரகங்கள் எந்தெந்த ராசி கட்டத்தில் இருக்கின்றன என்பதை நமக்கு தெரிவிக்கின்ற ஒரு அம்சமாகும். இதன் மூலம் நம்முடைய யோக, அவயோகங்களை அறிந்து கொள்ள முடியும். இதில் சில விஷயங்கள் நம் சாஸ்திர கணக்கிற்கு அப்பாற்பட்டவையாகும். அதுதான் நம்முடைய கர்ம வினை. அதைத்தான் நாம் பிராரப்தம், கொடுப்பினை என்று சொல்கிறோம். ஜாதகப்படி குழந்தை பாக்யம் உண்டு என்று கணித்து சொல்கிறோம். ஆனால் இத்தனை ஆண், இத்தனை பெண் என்று அறுதியிட்டு சொல்ல முடியாது. பூமி யோகம், வீடு யோகம் உண்டு.

ஆனால் ஒன்றா, மூன்றா, நான்கா என்று சொல்ல முடியாது. அதை அந்த இறைசக்தி முன்கூட்டியே முடிவு செய்து விடுகின்றது. இதை தான் நாம் வாங்கி வந்த வரம் என்று சொல்கிறோம். பரிகாரங்கள், நேர்த்திக்கடன்கள் போன்றவை எல்லாம் எந்தக் காலத்திலும் வீண் போகாது. பகவானுக்காக செலவழிக்கப்படும் பணமும், நேரமும் நிச்சயம் பலன் தரும். ஒரு சிலருக்கு உடனே பலன் கிடைக்கிறது. ஒரு சிலருக்கு சிறிது தாமதமாகிறது. இதற்கு காரணம் அவரவர் ஜாதக கட்டத்தில் உள்ள கிரக சேர்க்கைகள், திசா புக்திகளாகும்.

திருமண அமைப்பு  தோஷம்  யோகம்  பொருத்தம்

திருமண அமைப்பில் ஜாதக பலம் மிக முக்கிய அங்கம் வகிக்கின்றது. இதில் பிரதானமாக முதலில் லக்னம் இதிலிருந்துதான் நாம் மற்ற அமைப்புகளை கணக்கிடுகின்றோம். இதில் திருமண விஷயமாக 2, 4, 5, 7, 8 ஆகிய வீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கல்யாண யோகமும், தோஷமும் இந்த வீடுகளில் இருந்துதான் அறியப்படுகிறது. இத்துடன் தேவகுரு என்ற குருபகவானும், அசுர குரு, களத்திரகாரகன் என்ற சுக்கிர பகவானும் முக்கியமாக ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது இந்த இருவரின் பலத்தை பார்ப்பது மிக முக்கியமும், அவசியமுமாகும்.

குருவின் அதிகாரம்

சாதாரணமாக திருமணம் என்றவுடன் எல்லோரும் குருபலம் உள்ளதா என்று கேட்பார்கள். அந்த அளவிற்கு இவரின் பங்கு மிகவும் முக்கியமானது. நம் வாழ்க்கைக்குத் தேவையான பல விஷயங்கள் இவரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தன புத்திரகாரகன் என்ற அமைப்பை பெற்றவர். காசு, பணம் என்னும் பொருட் செல்வத்தையும், புத்திரம் என்ற குழந்தைச் செல்வத்தையும் அருளக்கூடியவர். மேலும் இவரை போககாரகன் என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள். பெண்கள் ஜாதகத்தில் இவரை பர்த்தாகாரகன் என்று குறிப்பிட்டு சொல்கிறார்கள். அதாவது கணவனின் தன்மைகளை பற்றி தெரிவிக்கும் கிரகம் ஆகும். இப்படி இவருக்கு பல்வேறு சிறப்புக்கள் பார்வை யோகம் எல்லாம் இருந்தாலும், குரு இருக்கும் இடம் பாழ்.

பார்க்கும் இடம் விருத்தி என்பதற்கேற்ப பலாபலன்கள் அமையும். குறிப்பாக கல்யாண வாழ்க்கையை பற்றி பார்க்கும்போது குருபகவான் லக்னத்திற்கு 2, 5, 7, 12 போன்ற இடங்களில் பிற கிரகங்களுடன் சேராமல் தனித்து இருப்பது, அந்தணன் தனித்து இருந்தால் அவதிகள் மெத்த உண்டு என்பதற்கேற்ப பல்வேறு வகையில் நிம்மதியற்ற தன்மை, கருத்து வேறுபாடுகள், புத்திரதோஷம், கவுரவ பாதிப்பு, கேந்திராதிபத்ய தோஷம், குல தர்மத்திற்கு விரோதமான செயல்கள், படுக்கை சுகக் குறைவு போன்ற பல்வேறு பாதிப்புகள் இருக்கும். ஆகையால், திருமண விஷயத்தில் குருவினுடைய அமைப்பை முக்கியமாக பார்ப்பது மிகவும் அவசியமாகும்.

களத்திரகாரகன்

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது மிக முக்கியமாக நாம் சுக்கிரனின் நிலையைப் பார்க்க வேண்டும். இவர் நீச்சம் அடையாமல் இருப்பது சிறப்பு. சுக்கிரன் களத்திரகாரகன் என்பதால் இவர் ஏழாம் வீட்டில் இருப்பது களத்திரதோஷமாகும். மேலும், இவர் 6, 8, 12 போன்ற ஸ்தானாதிபதிகளுடன் இணையாமல் இருப்பது நன்மையைத் தரும். சுக்கிரனின் அம்சங்கள் மிகவும் விசேஷமானவை. ஆகையால்தான் அவருக்குத் திருமண வாழ்வில் இவ்வளவு முக்கியத்துவம்.

சுக்கிரன் என்றாலே சுகம், உல்லாசம், மோகம், காதல், காமம், களியாட்டம், இச்சை, ஆசை, போகம், கவித்துவம், கற்பனை, கலை, இசை, ஆடல், பாடல், நடனம், நாட்டியம், சிற்றின்பத்தின் ஊற்று, சுக்கிலத்தின் அதிபதி என்று பல்வேறு சுகபோகங்களை வாரி வழங்கக்கூடிய ஆற்றல், வலிமை என அனைத்தும் நிரம்பப்பெற்ற விடிவெள்ளிதான் சுக்கிரன். ஆண்கள் ஜாதகத்தில் மனைவி யோகத்தையும், பெண்கள் ஜாதகத்தில் இல்வாழ்க்கை இன்பத்தையும் அருளக்கூடியவர்.

ஆண்களுக்கு சிற்றின்ப கிளர்ச்சியையும், சுக்கிலவீர்ய சக்தியையும் தருபவர். பெண்களுக்கு அழகு, கவர்ச்சி, காந்தப் பார்வை, அசத்தும் உடல் அமைப்பு, மோகமான நளின நடை, லட்சுமி கரம் போன்றவற்றை அளிப்பவர். இவர் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய சுப கீர்த்தி, அப கீர்த்தி, கௌரவம், அசாபாசங்களை தீர்மானிக்கக் கூடியவர். ஆகையால் இவரின் பலம் ஜாதக கட்டத்தில் மிகமிக அவசியம்.

ஜாதக தோஷங்கள்

1. செவ்வாய்

செயல் ஆற்றல்மிக்க பராக்கிரமம் உள்ள கிரகம் செவ்வாய் ஆகும். உடலின் ரத்த ஓட்டத்திற்கு ஆதாரமாக இருப்பவர், வெப்பத்தை வெளிப்படுத்தக்கூடியவர். ஆண்மகனின் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்திருந்தால்தான் ஊக்கம், தன்னம்பிக்கை, ஆண்மை போன்றவை மேம்படும். உடல் உறவில் வீரியத்துடன் ஈடுபட முடியும். பெண்கள் ஜாதகத்தில் பூப்படைதல், மாதவிடாய், உறவில் இன்பம், உள்ளக் கிளர்ச்சி, பாலுணர்வு போன்றவற்றை தூண்டக்கூடியவர். ஆகையால்தான் தோஷம் என்ற பெயரில் ஆண், பெண் ஜாதகத்தை சேர்க்கும்போது மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமண பந்தத்தில் ஆண், பெண் சேர்க்கையே வம்சம் விருத்தியடைய முக்கியமானது. இருவருக்கும் அந்த இச்சையைத் தருவதில் செவ்வாய்க்கு முதலிடமும், முக்கியத்துவமும் கொடுக்கப்படுகிறது.

இதை நம் முன்னோர்கள் தோஷம் என்று பிரித்து அந்த வகையான ஜாதகங்களை ஒன்று சேர்த்து இல்லற வாழ்வில் இருவரும் சரிசமமாக இன்பம் பெற வழிவகை செய்தார்கள். இதைத்தவிர செவ்வாய் தோஷம் வேறு எதுவும் இல்லை. இத்தகைய வீர்யமிக்க செவ்வாய் நம் ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்கிறோம். இதற்கேற்ப 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருக்கும் ஜாதகங்கள் இரண்டைச் சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. பெரும்பாலான ஜாதகங்களில் அதாவது 90% சதவீதத்திற்கு மேல் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும். தோஷம் நிவர்த்தியாகி விட்டது என்பதற்காக, செவ்வாய் தோஷம் அறவே இல்லாத ஜாதகங்களை சேர்க்கக் கூடாது. அதாவது 1, 3, 5, 6, 9, 11ல் செவ்வாய் உள்ள ஜாதகத்துடன் சேர்க்கக் கூடாது.

2. ராகுகேது

லக்னத்தில் 2, 7, 8 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது இருப்பதால் சர்ப்பதோஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த தோஷ அமைப்புள்ள ஜாதகங்களை அதே சம தோஷமுள்ள ஜாதகத்துடன் சேர்ப்பது தோஷ சமன்.

3. மாங்கல்ய தோஷம்

பெண்கள் ஜாதகத்தில் லக்னத்திற்கு எட்டாம் இடத்தில் ராகு, கேது, சனி, சூரியன் போன்ற கிரகங்கள் இருப்பது மாங்கல்ய தோஷம், அந்த எட்டாம் வீட்டை குரு மற்றும் சுப கிரகங்கள் பார்த்தால் தோஷ நிவர்த்தி.

4. புத்திர தோஷம்

லக்னத்திற்கு ஐந்தாமிடம் புத்திர ஸ்தானம். இந்த இடத்தில் ராகு, கேது மற்றும் நீச்ச கிரகங்கள் இருந்தால் புத்திர தோஷம். மேலும் 6, 8க்கு உடையவர்கள் ஐந்தாம் இடத்தில் இருந்தால் குழந்தை பாக்யம் தாமதமாகலாம். மேலும், பெண்கள் ஜாதகத்தில் நான்காம் வீட்டையும் பார்ப்பது அவசியமாகும்.

நட்சத்திர விஷயங்கள்

ஒரு காலத்தில் வெறும் நட்சத்திர பொருத்தம், பெயர் ராசிப் பொருத்தம் பார்த்து திருமணம் செய்தார்கள். அது அந்த காலகட்ட பாரம்பரியம், பரம்பரை, கூட்டுக்குடும்பம், உறவின் வலிமை, சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றால் எல்லாம் ஒத்துப் போனது. தற்காலத்தில் வெறும் நட்சத்திர பொருத்தம் பார்த்து ஏழு, எட்டு என்று கணக்கு பார்ப்பது சரிபடாது. முக்கியமாக ஜாதகப் பொருத்தமும், யோகமும் சம தோஷமும் தேவை. ஜோதிடத்தில் பல விஷயங்கள் ஆதாரம் இல்லாமல் மக்களிடையே பரப்பப்பட்டு விட்டன. உதாரணமாக ஒருவருக்கு ஏதாவது கஷ்டம், நஷ்டம், இழப்பு, நோய், வறுமை என்று ஏற்பட்டால் உடனே அவருக்குபிடித்து ஆட்டுகிறது. அஷ்டமத்து சனி ஆட்டுகிறது என்றும் சொல்வார்கள்.

அதே நேரத்தில் ஒருவருக்கு செல்வம், செல்வாக்கு, பட்டம், பதவி, யோகம், அதிர்ஷ்டம் என்று உயர்வு அடைந்தால் அவருக்கு சுக்கிரன் கொடுக்கிறார். சுக்கிர தசை அடிக்குது என்று சொல்வார்கள். இவை இரண்டுமே தவறானவையாகும். அவரவர்கள் ஜாதக அமைப்புப்படி யோகத்தை எந்த கிரகம் வேண்டுமானாலும் தரும். அதேபோல் அவயோகத்தை எந்த கிரகம் வேண்டுமானாலும் தரும். ஆகையால் ஜாதக கிரக அமைப்புக்களை சீர்தூக்கி பார்த்து தகுந்த ஜாதகங்களை சேர்ப்பதே சிறந்த வழியாகும்.

கோச்சார கிரக அமைப்பு

கோச்சாரம் என்றால் தற்காலம் ஏற்படும் கிரக மாறுதல்களை குறிப்பதாகும். அதாவது சனிப் பெயர்ச்சி, குருப் பெயர்ச்சி, ராகுகேது பெயர்ச்சி போன்றவையாகும். இதனால் ஒரு சிலருக்கு மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு சரியாகப் பலன் கிடைக்காது. கோச்சாரத்தில் குருபலன் பற்றி எல்லோரும் அறிவார்கள். குரு பலன் வந்துவிட்டதா என்று கேட்பார்கள். எனினும் இந்த குரு மாறுவதால் எல்லா மாற்றங்களும் நிகழுவதில்லை. குருபலன் இல்லாதபோதும் திருமணம் கூடி வரும். ஏனென்றால் ஜாதக அமைப்பின்படி உள்ள தசாபுக்தி அந்தர யோக நேரமே நமக்கு சுப நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி தருகின்றன.

ஆகையால், குரு பலன் இல்லையே என்ற கவலை வேண்டாம். எட்டாமிடத்தில் கோச்சாரத்தில் குரு இருந்தாலும் குருவின் பார்வை குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தில் படுவதால் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடக்கும். ஜென்ம குருவாக இருந்தாலும் குரு பார்வை களத்திர ஸ்தானமான ஏழாம் இடத்தில் படுவதால் திருமண யோகத்தை கொடுப்பார். ஒரு குடும்பத்தில் தாய், தந்தை, திருமண வயதில் உள்ள ஆண், பெண் இருபாலருக்கும் ஏழரைச் சனி நடந்தால் சுபயோக சுப பாக்யம் கிடைக்கும். பெரியவர்களுக்கு விரய சனி நடக்கும்போது குடும்பத்தில் சுபச் செலவுகளை சனீஸ்வரர் ஏற்படுத்தி வைப்பார்.

தன குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் பொங்கு சனியாக வரும்போது திருமண பிராப்தத்தை தருவார். கோச்சார அமைப்பில் ராகுகேது இருக்கும் ராசியை குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் வந்து சேரும் பொழுதும் அல்லது கடந்து செல்லும் போதும் அல்லது பார்க்கும் பொழுதும் சுப விசேஷங்கள் கூடிவரும். ராகுகேது ஒருவரின் ராசிக்கு 2, 3, 5, 6, 9, 11 ஆகிய இடங்களில் வரும்போது கல்யாண யோகம் உண்டு. ஆகையால் எதற்குமே நேரம், காலம் மிக முக்கியமாகும். அதைவிட நமக்கு அனுபவிக்கும் பிராரப்தம் இருப்பது அவசியம். இவை இரண்டுமே இருப்பது கிரகங்களிடம்.

_ இன்டர்நெட்டில் இருந்து...

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...