google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

இடம் எங்கே ?

 அந்த நாளிலே சோழன் பெரிதும் தமிழார்வம் உடையவ னாக இருந்தான். கம்பர், புகழேந்தியார், செயங்கொண்டார், ஒட்டக் கூத்தர் ஆகிய பல புலவர்மணிகள் - அவன் அவையில் இருந்தனர். அவன் அவை, மீண்டும் ஒரு தமிழ்ச்சங்கம் உருவானதுபோலத் தமிழ் நலத்தால் மாண்புற்று விளங்கியது.


    ஒரு சமயம், அந்தச் சோழன் சோலைவளம் கண்டு மகிழ்வதற்காகச் சென்றான். அங்கே, காவிரிக்கரையோரத்தில் ஒரு சங்கு வாயைத் திறந்தபடியே வானத்தை நோக்கியபடி இருக்கக் கண்டதும் அவன் வியப்புற்றான். அப்போது கரையோரத்து மரத்தின் பூக்களிலிருந்து ஒரு துளி தேன் அதன் வாயில் கொட்டிற்று. அவன் உள்ளம் அதனைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தது.

    இயற்கையின் கருணையாகிய அரிய ஆற்றல் அவனுக்குப் புலனாயிற்று; அனைத்தையும் பேணிக் காக்கின்ற பேராற்றலின் உயர்வை உளங்கொண்டு போற்றினான். அறிவற்ற சங்கினையும் அங்கு வந்து அண்ணாந்திருக்கச் செய்து, அதன் வாயில் தேன் துளியினையும் வீழச்செய்து இன்புறுத்திய பெருங்கருணை அவனை ஆட்கொண்டது. அந்த நினைவிலே திளைத்தவனாகத் தன் அரண்மனைக்குச் சென்றான். இரவெல்லாம் அந்தக் காட்சி அவன் மனத்தை விட்டு அகலவேயில்லை.

    மறுநாட்பொழுதும் விடிந்தது. சோழனின் நாளோலக்க அவையும் கூடிற்று. மன்னன் அவைநாயகனாக அமர்ந்திருந்தான் புலவர்களும் அமைச்சர்களும் தளபதியருமாக அனைவரும் அங்கே ஒருங்கே திரளாகக் கூடியிருந்தனர்.

    அப்பொழுது ஒளவையார் சோழனின் அவையுள் மெல்ல நடந்து வந்தார். அவரைக் கண்டதும் வருக!' என்று வரவேற்றான் மன்னன். அமர்க' எனவும் சொன்னான். ஆனால் அங்கே அமர்வதற்கு இருக்கை எதுவும் இல்லாததனைக் கவனிக்கவில்லை; அதுபற்றி எவரும் கவலைப்படவுமில்லை.

    ஒளவையாரோ நெடுந்தொலைவினின்றும் நடந்து வந்தவர்; பல நாட்களாக நடந்து சோர்ந்து போயிருந்தவர், சோழனைக் காணவேண்டுமென்ற ஆர்வத்தின் மிகுதியினாலே தம் களைப்பையும் மறந்து உடனே சென்றவர். அவரை அவன் முறையாகக் கவனிக்காது, எவரையோ வரவேற்பது போல் வருக அமர்க!' என்று சொன்னது அவருக்கு மிகவும் வருத்தத்தைத் தந்தது.

      கால்நொந்தேன் நொந்தேன் கடுகி வழிநடந்தேன்
      யான்வந்த தூரம் எளிதன்று - கூனல் கருந்தேனுக்
      கங்காந்த காவிரிசூழ் நாடா
      இருந்தேனுக் கெங்கே இடம்?

    என்று பாடினார் அவர்.

    சோழன், வந்தவரை ஒளவையார் என்று அறிந்து கவனித்தானில்லை. அவன் மனமோ முந் நாளிற் கண்ட அந்த அதிசயக்காட்சியில் முற்றவும் நிலைத்திருந்தது. அதனாலே தான், அவருக்கு இருக்கை தருமாறு எவரையும் ஏவினானில்லை. எனினும், அவருடைய இப்பாடலைக் கேட்டதும், அவன் உள்ளம் தெளிந்து பூரிப்படைந்தது.

    'தெய்விக சக்தி உடையவர் போலும்! யான் நேற்றுக் கண்ட காட்சியை அங்ஙனமே உரைத்தனரே!' என வியந்து, அவரை அன்புடன் வரவேற்று உசாவினான். அவரே ஒளவையார் என்று அறிந்ததும், அவனுள்ளம் அளவிலா உவகை அடைந்தது. தான் கண்ட அந்த இனிய காட்சியைத் தன் அவையினர்க்கு உரைத்து, அதனையே அறிந்து உரைத்த ஒளவையாரின் ஞானச் சிறப்பையும் போற்றினான்.

    "சங்கானது மிகுதியான தேனைப் பருகுவதற்காகத் தன் வாயைத் திறந்து மேல் நோக்கியபடி இருக்கின்ற வளமுடைய காவிரியாற்றாற் சூழப்பெற்ற நாட்டிற்கு உரியவனே! நின்னைக் காணும் ஆர்வத்தாலே விரைவாக வழியினை எல்லாம் நடந்து கடந்தேன். என் கால்களும் மிகவும் நோவுற்றன. யான் கடந்து வந்த தூரமோ கடத்தற்கு எளிதல்லாத மிக்க நெடுந்தூரம் ஆகும். அங்ஙனம் வந்து நின் அவைக்கண் நின்றிருக்கும் எனக்கு, அமர்வதற்கு ஏற்ற இடம்தான் எங்கேயோ ?" என்பது செய்யுளின் பொருள்.

    கூனல் - சங்கு, நத்தை எனலும் ஆம்.

    'கூனலுக்கும் கருந்தேன் கிடைக்கின்ற நாட்டிலே, புலவரான எனக்கு மட்டும் இருக்கவோர் இடம் கிடையாதோ? நின் அன்புப் பரிசிலும் வாயாதோ?' என்ற குறிப்பையும் பாடல் கொண்டிருக்கிறது.
- புலியூர்க் கேசிகனின் ஒளவையார் தனிப்பாடல்களில் இருந்து.

Gemini Generated Image


வியாழன், 26 பிப்ரவரி, 2026

குதிரையும் கிழவியும்

 ஒளவையார் சிறந்த சிவபக்தர். சிவபெருமானை மனங்கனிந்து வழிபட்டு வந்ததுடன், அவருடைய மூத்த குமாரரான பிள்ளையார்ப் பெருமானையும் பூசித்து வந்தார். விநாயகரைப் பூசிக்கும் போது, தம்மையும் மறந்து, தியானத்தில் முற்றவும் ஈடுபட்டு விடுவது, இவரது இயல்பாக இருந்தது.


    ஒருநாள், ஒளவையார் விநாயக பூஜை செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சேரமான் பெருமாளும் சுந்தரரும் கயிலாயம் செல்லப் புறப்படும் செய்தி அவருக்கு கிடைத்தது.

    ஒளவையாருக்குத் தாமும் அவர்களுடன் கயிலாயம் போக வேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. பூசையை விரைவாக முடித்துவிட்டுத் தாமும் அவர்களுடன் சென்று பயணத்தில் கலந்துகொள்ள எண்ணினார். அந்த எண்ணத்தால், பூசையை விரைவாகச் செய்யவும் தொடங்கினார்.

    ஒளவையாரின் எண்ணத்தை அறிந்து கொண்டான் விநாயகப் பெருமான். 'ஒளவையே! அவசரம் ஏதும் வேண்டாம் அவர் களுக்கு முன்னதாக நின்னைக் கயிலாயத்திற் சேர்த்துவிடுகின்றேன். நீ வழக்கம் போலவே நின் பூசையைச் செய்க' என்றான்.

    ஒளவையாரும் விநாயகப் பெருமானின் ஆணைப்படியே நடந்து கொண்டார். பூசை முடிவு பெற்றது. விநாயகப் பெருமானின் அருளினை நினைந்து ஒளவையார் அகமகிழ்ந்தார்! 'சீதக்களபம்' என்னும் அகவலைப் பாடி, அப் பெருமானை மனங்கனிந்து துதித்துப் போற்றினார்.

    தமிழ் உவக்கும் பிள்ளையார்ப் பெருமானின் உள்ளமும் அதனைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தது. அவன் தன்னுடைய பேருருவை எடுத்து நின்றான். வானகம் வரை உயர்ந்து நின்றது அவன் திருமுடி; பாதலம் வரை சென்று நின்றன பாதங்கள், உலகெங்குங்கும் வியாபித்தது அவன் திருமேனி. ஒளவையார் அந்தத் தெய்வக்காட்சியிலே சித்தம் கலந்து மகிழ்ந்தார். வாக்களித்தபடியே அவரைத் தன் துதிக்கையால் எடுத்துக் கைலாயத்திற் சேர்த்து விட்டான் அந்தப் பெருமான்.

    சேரமான் பெருமாள் அழகிய குதிரைமீது சென்று கொண்டிருந்தார். சுந்தரமூர்த்திகள் யானையின் மீதமர்ந்து சென்று கொண்டிருந்தார். இருவரும் வழியனைத்தும் கடந்து கைலை சென்று சேர்ந்தனர். தம்முடன் ஒளவையாரும் வந்தனரில்லையே என்ற ஏக்கம் அவர்களுக்குள்ளே இருந்தது.

    கைலைக்கு வந்ததும், தங்களுக்கும் முன்பாக அங்கே வந்ததிருந்த ஒளவையாரைக் கண்டு வியப்புற்றனர். அந்த வியப்பினைச் சேரமானால் கட்டுப்படுத்த முடியவில்லை!
    'எங்கட்கு முற்பட நீங்கள் வந்து சேர்ந்தது எவ்வாறோ?' என்று கேட்டான் அவன். அப்போது, அவனுக்கு ஒளவையார் சொன்னதாக வழங்குவது இந்தச் செய்யுள்.

      மதுரமொழி நல்லுமையாள் சிறுவன் மலரடியை
      முதிரநினை யவல் லார்க்கரி தோமுகில் போன் முழங்கி
      அதிரவருகின்ற யானையும் தேரும் அதன்பின்வரும்
      குதிரையும் காதம் கிழவியும் காதம் குலமன்னனே!

    "சேரர் குடியாகிய உயர்குடியிலே தோன்றிய மன்னனே! இனிதான சொற்களைக் கூறுகின்ற நன்மையைத் தருகின்ற உமையம்மையின் குமாரன் விநாயகப் பெருமான். அவனுடைய திருவடித் தாமரைகளை அழுத்தமாக நினைந்து தமக்குரிய பற்றுக்கோடாகக் கொள்வதற்கு வல்லமையுடையவர் யாம். எமக்கு, நுமக்கு முன்பாக இவ்விடம் வந்து சேர்தலும் அரிதாகுமோ? மேகத்தின் இடிமுழக்கத்தினைப் போல முழங்கிக் கொண்டு, தாம் நடக்கும் நிலமும் அதிரும்படியாக வருவன் நீங்கள் வந்த யானையும், தேரும், அதன் பின்னாகவே வந்து கொண்டிருந்த குதிரையும் எல்லாம். அவை நாழிகைக்குக் காதவழி நடந்தால், வழி நடக்கவியலாத இந்தக் கிழவியும், கணபதி கருணையால் காதவழி கடந்துவிடுவாள் என்பதனை அறிவாயாக" என்பது பொருள்.

    முதிர நினைய வல்லார்க்கு' என்றதால், அவர்களிடம் அத்தகைய அன்பின் முதிர்ச்சி நிலைபெறவில்லை என்றும் அதனாலேயே அவர்கள் தாம் முன்னாக வந்ததற்கு வியந்தனர் என்றும் கூறினார். பக்திமையில் தம்மை முற்றவும் இழந்த தனிநிலையே சிறந்த பெருநிலை என்பதைக் காட்டுவது இதுவாகும்.

    'இறையருள் எதனையும் எளிதாக அடைவிக்கும்' என்ற கருத்தும் இச் செய்யுளால் வலுப்பெறும்.
    -புலியூர்க் கேசிகனின் ஒளவையார் தனிப்பாடல்களில் இருந்து.


Gemini Generated Image 

புதன், 25 பிப்ரவரி, 2026

பரமனுக்குப் பாரம்

    அருமைமிகு தமிழ்நாட்டிலே ஒரு வேடிக்கையான மரபு எப்படியோ புகுந்துவிட்டது. சிறப்புடைய சான்றோர்களைத் தெய்வப்பிறப்பினர் என்றே கருதினர். அதனால், அவர்களின் வரலாறு வியப்பான முறையிலே விளங்க வேண்டும் எனவும் எண்ணினர். இந்த எண்ணம் பற்பல புனைவுகளுக்கு மக்களைத் தூண்டின. ஒவ்வொரு பெரும்புலவரின் பிறப்பைப் பற்றியும் வழங்கி வருகின்ற புனைகதைகளுக்கும் இந்த நம்பிக்கையையே காரணமாகக் கொள்ள வேண்டும். இந்தப் புனைவுகளைக் கழித்தே அவைகளை நாம் உளங்கொள்ள வேண்டும்.

    சிறந்த பெரும்புலவர்களாக ஒளவையார்கள் விளங்கினர். சங்ககாலப் பெரும் புலவர்களிடையே ஒருவர் இருந்தார். கம்பர் முதலானவர்களின் காலத்தில் மற்றொருவர் இருந்தார். மற்றும் சிலர் வேறு பல காலங்களில் வாழ்ந்திருந்தனர். ஒளவையார்' என்ற பெயரின் பொதுமையினால், அவர்கள் அனைவரும் காலப் போக்கில் ஒருவரேயாகிவிட்ட அதிசயமும் நடந்திருக்கிறது. ஒளவையார் சிரஞ்சீவித்தன்மை பெற்றவர் என்ற விநோதமான நம்பிக்கையும் இதன்பின் நிலைபெறலாயிற்று.

    'ஒளவையார் ' ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவருக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவர். பாணர்களின் வீட்டில் ஆதியும் பகவனும் தங்கியிருந்தபோது பிறந்தவர். அவர்களுடைய ஒப்பந்தப்படி, அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிடுமாறு பகவன் பணித்தார். அந்த அம்மை கலக்கமுற்றனர். அப்போது, அந்தச் சிறு குழந்தை தன் வாயைத் திறந்து ஒரு வெண்பாவைப் பாடியது.

    அதனைக் கேட்ட தாயான ஆதியும் தன் மயக்கத்தினின்றும் நீங்கினாள்; மனத்தெளிவு கொண்டாள். அதனை அவ் விடத்தேயே விட்டுவிட்டுச் சென்றனர். ஒளவையார் பிறந்த கதை இப்படி வழங்கி வருகிறது. அந்தக் குழந்தை பாடியதாக ஒரு வெண்பாவும் காணப்பெறுகின்றது. அந்த வெண்பா இதுவாகும்,

    'உலகத்து உயிரினங்களைத் தோற்றுவித்தவன் சிவபெருமான். உயிர்கள் அதனதன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை அவன் கவனிப்பான். அவற்றிற்கு ஏற்றவாறு அதனதன் வாழ்வின் போக்கையும் வகுத்து நிர்ணயிப்பான். இந்த நிர்ணயம் மாற்ற முடியாதது. அதனை முறையே உயிர்களுக்கு ஊட்டுவதற்கு அவன் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது, தவறியதும் கிடையாது.'

    'இங்ஙனமாகப் பிறப்பிலேயே வாழ்வுக்கதியை வகுத்து விட்ட சிவன், ஆதிபரம்பொருள் ஆவான். அவன், என்றும் உள்ளவன்; அவன் செத்துவிடவில்லை ; அவன் வகுத்த நியதி மாறுபடப் போவதும் இல்லை.

    'இந்த உண்மையை உணர்ந்தவர்கள், தன் மக்களின் வாழ்வினைக் கருதிக் கவலைப்படமாட்டார்கள். எத்துணைத் துயரம் வந்தாலும், காக்கும் பொறுப்புக் கடவுளுடையது' என்ற நினைத்து, அவர்கள் மன அமைதி கொள்வார்கள்.

      இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
      விட்டசிவ னும் செத்து விட்டானோ - முட்டமுட்டப்
      பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய்
      நெஞ்சமே யஞ்சாதே நீ.

    ஒளவைக் குழந்தை வெண்பாவைச் சொல்லி, 'அன்னையே! நீ நெஞ்சம் வருந்த வேண்டாம்' என்று, தன்னைப் பெற்றவளுக்குத் தேறுதலும் கூறிற்று என்பார்கள்.

    "அன்னையே! என்பால் விருப்பமுடன், என் வாழ்வின் போக்கு இன்னபடியாக அமைவதாக என்று என் தலையிலே எழுதி, என்னைப் பிறப்பித்த சிவபெருமானும் செத்துப் போய் விட்டானோ? இல்லை அல்லவோ! அதனால், மிகவும் கொடிய பஞ்சமே நாடெங்கும் ஏற்பட்டாலும், என்னைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கே அல்லவா! ஆகவே, நீ உன் நெஞ்சத்தே என்னைக் குறித்த எவ்வகையான, அச்சத்தையும் கொள்ளாது நிம்மதியாகச் சென்று வருக" என்பது இதன் பொருள்.

      'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
      தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'

    என்றவாறு, இதே கருத்தினைத் திருக்குறளும் கூறும். அதனையும் இத்துடன் நோக்கிப் பொருள் உணர்தல் வேண்டும்.

    'குழந்தை பாடுமா?' என்று கேட்கலாம். பாடும். அது பூர்வ ஞானம்' என்று சான்றோர் கூறுகின்றனர். சிவனன்றித் துணை இல்லை' என்று அறிவுறுத்தும் சிறந்த வெண்பா இது.

 - புலியூர் கேசிகனின் ஒளவையார் தனிப்பாடல்களில் இருந்து.


Gemini Generated Image

திங்கள், 23 பிப்ரவரி, 2026

வெற்றிலை

வெற்றிலையின் வரலாறு, பெயர்க்காரணம், இலக்கியப் பதிவுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விரிவான தொகுப்பு:

1. பெயர்க்காரணம் மற்றும் வேறு பெயர்கள்

  • பெயர்க்காரணம்: ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கிடையேயான போட்டியில் வென்ற சிறுவன் அடையாளமாகக் காட்டிய இலை என்பதால் 'வெற்றி + இலை = வெற்றிலை' என அழைக்கப்படுவதாக ஒரு கதை உண்டு. சமைப்பதற்குப் பயன்படாத (வெறுமை) இலை என்பதால் 'வெற்றிலை' எனப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
  • வேறு பெயர்கள்:
    • தமிழ்: வெள்ளிலை, மெல்லிலை, திரையல், மெல்லடகு, வேந்தன், இகனி.
    • வடமொழி: தாம்பூலம், நாகவல்லி, புஜங்கலதா, சப்த ஷீரா.

2. சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றுப் பதிவுகள்

  • சங்க காலம்: கலித்தொகையில் 'தம்பலம்' (தாம்பூலத்தின் திரிபு) என்ற பெயரில் வெற்றிலை உண்ணும் வழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக்காஞ்சி, மதுரையின் கடைவீதிகளில் வெற்றிலை மற்றும் சுண்ணாம்பு விற்கப்பட்டதை "நீடு கொடி இலையினர்" என்று குறிப்பிடுகிறது.
  • காப்பியங்கள்: சிலப்பதிகாரத்தில் கோவலன் - கண்ணகி இடையிலான இறுதி உணவுக்குப் பின் வெற்றிலை மடித்துக் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது. சீவக சிந்தாமணியில் வெற்றிலை வைக்கும் பெட்டி 'மணிச்செப்பு' என அழைக்கப்படுகிறது.
  • பயணக் குறிப்பு: 13-ஆம் நூற்றாண்டில் மார்க்கோ போலோ, இந்தியர்கள் வெற்றிலையைச் சுண்ணாம்பு மற்றும் வாசனைப் பொருட்களுடன் சேர்த்து உண்பதையும், அது உடல் நலத்திற்கு நல்லது என்று அவர்கள் கருதியதையும் பதிவு செய்துள்ளார்.

3. வெற்றிலையின் வகைகள் மற்றும் அளவீடுகள்

வெற்றிலையின் நிறம் மற்றும் தன்மையைப் பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன:

  • கற்பூர வெற்றிலை: இளம் பச்சை நிறம் (வெள்ளை வெற்றிலை).
  • கரும்பச்சை: ஆண் வெற்றிலை (காரமானது).
  • இளம்பச்சை: பெண் வெற்றிலை.
  • அளவீடுகள்: 105 வெற்றிலைகள் கொண்டது ஒரு கவுளி; 60 கவுளிகள் கொண்டது ஒரு வத்து.

4. பண்பாட்டு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம்

  • விருந்து உபசரிப்பு: "வெற்றிலையில்லா விருந்தில்லை" என்பது பழமொழி. சுப காரியங்களில் 'நிச்சய தாம்பூலம்' முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • சமணத் துறவியர்: கி.பி 7-ஆம் நூற்றாண்டில் சமணத் துறவிகள் வெற்றிலை, பாக்கு, சுக்கு தின்னும் வழக்கம் கொண்டிருந்ததாகத் தேவாரம் கூறுகிறது.
  • பக்தி இலக்கியம்: ஆழ்வார்களும் (திருவாய்மொழி), தாயுமானவரும் இறைவனை வணங்கும் போதும், அன்றாட வாழ்விலும் வெற்றிலையின் சிறப்பைப் பாடியுள்ளனர்.

5. மருத்துவக் குணங்கள்

  • வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.
  • செரிமானக் கோளாறுகள், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்திற்குச் சிறந்த மருந்தாகிறது.
  • வெற்றிலை மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீரின் நிலைகளைப் பொறுத்து (முதல் சுரப்பு முதல் ஐந்தாம் சுரப்பு வரை) அதன் மருத்துவக் குணங்களைச் சித்தர்கள் விளக்கியுள்ளனர்.

குறிப்பு: போரில் கணவன் இறந்தால், அவனது மனைவி பச்சிலை (வெற்றிலை) உண்ணாது நோன்பிருக்கும் பழக்கம் இருந்ததை புறநானூறு காட்டுகிறது. இது வெற்றிலை ஒருவரின் உணர்ச்சிகளைத் தூண்டவல்லது என்ற மருத்துவக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.



இடம் எங்கே ?

 அந்த நாளிலே சோழன் பெரிதும் தமிழார்வம் உடையவ னாக இருந்தான். கம்பர், புகழேந்தியார், செயங்கொண்டார், ஒட்டக் கூத்தர் ஆகிய பல புலவர்மணிகள் - அவன்...