google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

புதன், 25 பிப்ரவரி, 2026

பரமனுக்குப் பாரம்

    அருமைமிகு தமிழ்நாட்டிலே ஒரு வேடிக்கையான மரபு எப்படியோ புகுந்துவிட்டது. சிறப்புடைய சான்றோர்களைத் தெய்வப்பிறப்பினர் என்றே கருதினர். அதனால், அவர்களின் வரலாறு வியப்பான முறையிலே விளங்க வேண்டும் எனவும் எண்ணினர். இந்த எண்ணம் பற்பல புனைவுகளுக்கு மக்களைத் தூண்டின. ஒவ்வொரு பெரும்புலவரின் பிறப்பைப் பற்றியும் வழங்கி வருகின்ற புனைகதைகளுக்கும் இந்த நம்பிக்கையையே காரணமாகக் கொள்ள வேண்டும். இந்தப் புனைவுகளைக் கழித்தே அவைகளை நாம் உளங்கொள்ள வேண்டும்.

    சிறந்த பெரும்புலவர்களாக ஒளவையார்கள் விளங்கினர். சங்ககாலப் பெரும் புலவர்களிடையே ஒருவர் இருந்தார். கம்பர் முதலானவர்களின் காலத்தில் மற்றொருவர் இருந்தார். மற்றும் சிலர் வேறு பல காலங்களில் வாழ்ந்திருந்தனர். ஒளவையார்' என்ற பெயரின் பொதுமையினால், அவர்கள் அனைவரும் காலப் போக்கில் ஒருவரேயாகிவிட்ட அதிசயமும் நடந்திருக்கிறது. ஒளவையார் சிரஞ்சீவித்தன்மை பெற்றவர் என்ற விநோதமான நம்பிக்கையும் இதன்பின் நிலைபெறலாயிற்று.

    'ஒளவையார் ' ஆதி என்பவளுக்கும் பகவன் என்பவருக்கும் பிறந்த மக்கள் எழுவருள் ஒருவர். பாணர்களின் வீட்டில் ஆதியும் பகவனும் தங்கியிருந்தபோது பிறந்தவர். அவர்களுடைய ஒப்பந்தப்படி, அந்தக் குழந்தையை அங்கேயே விட்டுவிடுமாறு பகவன் பணித்தார். அந்த அம்மை கலக்கமுற்றனர். அப்போது, அந்தச் சிறு குழந்தை தன் வாயைத் திறந்து ஒரு வெண்பாவைப் பாடியது.

    அதனைக் கேட்ட தாயான ஆதியும் தன் மயக்கத்தினின்றும் நீங்கினாள்; மனத்தெளிவு கொண்டாள். அதனை அவ் விடத்தேயே விட்டுவிட்டுச் சென்றனர். ஒளவையார் பிறந்த கதை இப்படி வழங்கி வருகிறது. அந்தக் குழந்தை பாடியதாக ஒரு வெண்பாவும் காணப்பெறுகின்றது. அந்த வெண்பா இதுவாகும்,

    'உலகத்து உயிரினங்களைத் தோற்றுவித்தவன் சிவபெருமான். உயிர்கள் அதனதன் முற்பிறப்பில் செய்த நல்வினை தீவினைகளை அவன் கவனிப்பான். அவற்றிற்கு ஏற்றவாறு அதனதன் வாழ்வின் போக்கையும் வகுத்து நிர்ணயிப்பான். இந்த நிர்ணயம் மாற்ற முடியாதது. அதனை முறையே உயிர்களுக்கு ஊட்டுவதற்கு அவன் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது, தவறியதும் கிடையாது.'

    'இங்ஙனமாகப் பிறப்பிலேயே வாழ்வுக்கதியை வகுத்து விட்ட சிவன், ஆதிபரம்பொருள் ஆவான். அவன், என்றும் உள்ளவன்; அவன் செத்துவிடவில்லை ; அவன் வகுத்த நியதி மாறுபடப் போவதும் இல்லை.

    'இந்த உண்மையை உணர்ந்தவர்கள், தன் மக்களின் வாழ்வினைக் கருதிக் கவலைப்படமாட்டார்கள். எத்துணைத் துயரம் வந்தாலும், காக்கும் பொறுப்புக் கடவுளுடையது' என்ற நினைத்து, அவர்கள் மன அமைதி கொள்வார்கள்.

      இட்டமுடன் என் தலையில் இன்னபடி என்றெழுதி
      விட்டசிவ னும் செத்து விட்டானோ - முட்டமுட்டப்
      பஞ்சமே யானாலும் பாரம் அவனுக்கன்னாய்
      நெஞ்சமே யஞ்சாதே நீ.

    ஒளவைக் குழந்தை வெண்பாவைச் சொல்லி, 'அன்னையே! நீ நெஞ்சம் வருந்த வேண்டாம்' என்று, தன்னைப் பெற்றவளுக்குத் தேறுதலும் கூறிற்று என்பார்கள்.

    "அன்னையே! என்பால் விருப்பமுடன், என் வாழ்வின் போக்கு இன்னபடியாக அமைவதாக என்று என் தலையிலே எழுதி, என்னைப் பிறப்பித்த சிவபெருமானும் செத்துப் போய் விட்டானோ? இல்லை அல்லவோ! அதனால், மிகவும் கொடிய பஞ்சமே நாடெங்கும் ஏற்பட்டாலும், என்னைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அவனுக்கே அல்லவா! ஆகவே, நீ உன் நெஞ்சத்தே என்னைக் குறித்த எவ்வகையான, அச்சத்தையும் கொள்ளாது நிம்மதியாகச் சென்று வருக" என்பது இதன் பொருள்.

      'வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
      தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது'

    என்றவாறு, இதே கருத்தினைத் திருக்குறளும் கூறும். அதனையும் இத்துடன் நோக்கிப் பொருள் உணர்தல் வேண்டும்.

    'குழந்தை பாடுமா?' என்று கேட்கலாம். பாடும். அது பூர்வ ஞானம்' என்று சான்றோர் கூறுகின்றனர். சிவனன்றித் துணை இல்லை' என்று அறிவுறுத்தும் சிறந்த வெண்பா இது.

 - புலியூர் கேசிகனின் ஒளவையார் தனிப்பாடல்களில் இருந்து.


Gemini Generated Image

திங்கள், 23 பிப்ரவரி, 2026

வெற்றிலை

வெற்றிலையின் வரலாறு, பெயர்க்காரணம், இலக்கியப் பதிவுகள் மற்றும் பயன்பாடுகள் குறித்த விரிவான தொகுப்பு:

1. பெயர்க்காரணம் மற்றும் வேறு பெயர்கள்

  • பெயர்க்காரணம்: ஆடு மேய்க்கும் சிறுவர்களுக்கிடையேயான போட்டியில் வென்ற சிறுவன் அடையாளமாகக் காட்டிய இலை என்பதால் 'வெற்றி + இலை = வெற்றிலை' என அழைக்கப்படுவதாக ஒரு கதை உண்டு. சமைப்பதற்குப் பயன்படாத (வெறுமை) இலை என்பதால் 'வெற்றிலை' எனப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
  • வேறு பெயர்கள்:
    • தமிழ்: வெள்ளிலை, மெல்லிலை, திரையல், மெல்லடகு, வேந்தன், இகனி.
    • வடமொழி: தாம்பூலம், நாகவல்லி, புஜங்கலதா, சப்த ஷீரா.

2. சங்க இலக்கியம் மற்றும் வரலாற்றுப் பதிவுகள்

  • சங்க காலம்: கலித்தொகையில் 'தம்பலம்' (தாம்பூலத்தின் திரிபு) என்ற பெயரில் வெற்றிலை உண்ணும் வழக்கம் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக்காஞ்சி, மதுரையின் கடைவீதிகளில் வெற்றிலை மற்றும் சுண்ணாம்பு விற்கப்பட்டதை "நீடு கொடி இலையினர்" என்று குறிப்பிடுகிறது.
  • காப்பியங்கள்: சிலப்பதிகாரத்தில் கோவலன் - கண்ணகி இடையிலான இறுதி உணவுக்குப் பின் வெற்றிலை மடித்துக் கொடுக்கும் காட்சி இடம்பெறுகிறது. சீவக சிந்தாமணியில் வெற்றிலை வைக்கும் பெட்டி 'மணிச்செப்பு' என அழைக்கப்படுகிறது.
  • பயணக் குறிப்பு: 13-ஆம் நூற்றாண்டில் மார்க்கோ போலோ, இந்தியர்கள் வெற்றிலையைச் சுண்ணாம்பு மற்றும் வாசனைப் பொருட்களுடன் சேர்த்து உண்பதையும், அது உடல் நலத்திற்கு நல்லது என்று அவர்கள் கருதியதையும் பதிவு செய்துள்ளார்.

3. வெற்றிலையின் வகைகள் மற்றும் அளவீடுகள்

வெற்றிலையின் நிறம் மற்றும் தன்மையைப் பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன:

  • கற்பூர வெற்றிலை: இளம் பச்சை நிறம் (வெள்ளை வெற்றிலை).
  • கரும்பச்சை: ஆண் வெற்றிலை (காரமானது).
  • இளம்பச்சை: பெண் வெற்றிலை.
  • அளவீடுகள்: 105 வெற்றிலைகள் கொண்டது ஒரு கவுளி; 60 கவுளிகள் கொண்டது ஒரு வத்து.

4. பண்பாட்டு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம்

  • விருந்து உபசரிப்பு: "வெற்றிலையில்லா விருந்தில்லை" என்பது பழமொழி. சுப காரியங்களில் 'நிச்சய தாம்பூலம்' முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • சமணத் துறவியர்: கி.பி 7-ஆம் நூற்றாண்டில் சமணத் துறவிகள் வெற்றிலை, பாக்கு, சுக்கு தின்னும் வழக்கம் கொண்டிருந்ததாகத் தேவாரம் கூறுகிறது.
  • பக்தி இலக்கியம்: ஆழ்வார்களும் (திருவாய்மொழி), தாயுமானவரும் இறைவனை வணங்கும் போதும், அன்றாட வாழ்விலும் வெற்றிலையின் சிறப்பைப் பாடியுள்ளனர்.

5. மருத்துவக் குணங்கள்

  • வெற்றிலையுடன் மிளகு சேர்த்துச் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.
  • செரிமானக் கோளாறுகள், வாயுத்தொல்லை மற்றும் அஜீரணத்திற்குச் சிறந்த மருந்தாகிறது.
  • வெற்றிலை மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீரின் நிலைகளைப் பொறுத்து (முதல் சுரப்பு முதல் ஐந்தாம் சுரப்பு வரை) அதன் மருத்துவக் குணங்களைச் சித்தர்கள் விளக்கியுள்ளனர்.

குறிப்பு: போரில் கணவன் இறந்தால், அவனது மனைவி பச்சிலை (வெற்றிலை) உண்ணாது நோன்பிருக்கும் பழக்கம் இருந்ததை புறநானூறு காட்டுகிறது. இது வெற்றிலை ஒருவரின் உணர்ச்சிகளைத் தூண்டவல்லது என்ற மருத்துவக் கருத்தை உறுதிப்படுத்துகிறது.



பரமனுக்குப் பாரம்

அருமைமிகு தமிழ்நாட்டிலே ஒரு வேடிக்கையான மரபு எப்படியோ புகுந்துவிட்டது. சிறப்புடைய சான்றோர்களைத் தெய்வப்பிறப்பினர் என்றே கருதினர். அதனால், அவ...