google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: செப்டம்பர் 2018

வெள்ளி, 21 செப்டம்பர், 2018

பராசக்தி - நீதிமன்ற வசனம்


எழுத்தாளர்: கலைஞர் 
இந்த நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளைச் சந்தித்து இருக்கிறது. புதுமையான பல மனிதர்களைக் கண்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கு விசித்திரமல்ல, வழக்காடும் நான் புதுமையான மனிதனுமல்ல. வாழ்க்கைப் பாதையிலே சர்வ சாதாரணமாகக் காணக்கூடிய ஜீவன்தான்.
கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். பூசாரியைத் தாக்கினேன். குற்றம் சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம். நீங்கள் எதிர்பார்ப்பீர்கள், நான் இதையெல்லாம் மறுக்கப்போகிறேன் என்று. இல்லை நிச்சயமாக இல்லை. கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாது என்பதற்காக அல்ல. கோவில் கொடியவர்களின் கூடாரமாய் இருக்கக்கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன். அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல் வேஷமாகி விட்டதைக் கண்டிப்பதற்காக.
உனக்கேன் இவ்வளவு அக்கறை, உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை, என்று கேட்பீர்கள். நானே பாதிக்கப்பட்டேன். சுயநிலம் என்பீர்கள். என் சுயநிலத்தில் பொதுநலம் கலந்திருக்கிறது. ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்அதைப் போல.
என்னைக் குற்றவாளி, குற்றவாளி என்கிறார்களே, இந்தக் குற்றவாளியின் வாழ்க்கைப் பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நிடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று கணக்கு பார்க்க முடியும். பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில், படமெடுத்தாடும் பாம்புகள் நெளிந்திருக்கின்றன. தென்றலைத் தீண்டியதில்லை நான். ஆனால் தீயைத் தாண்டியிருக்கிறேன். கேளுங்கள் என் கதையை! நீதிபதி அவர்களே! தீர்ப்பு எழுதுவதற்கு முன் தயவு செய்து கேளுங்கள்.
தமிழ்நாட்டிலே இத்திருவிடத்திலே பிறந்தவன் நான். பிறக்க ஒரு நாடு பிழைக்க ஒரு நாடு. தமிழர்களின் தலையெழுத்துக்கு நானென்ன விதிவிலக்கா? ரங்கூன்! அது உயிரை வளர்த்தது. என்னை உயர்ந்தவன் ஆக்கியது. திருமணக் கோலத்தில் இருந்த என் தங்கையைக் காண வந்தேன். மோசடி வழக்கிலே ஈடுபட்டு இதோ குற்றவாளிக் கூண்டிலே உங்கள் முன் நிற்கிறாளே இந்த ஜாலக்காரி ஜூலி, இவள் வலையில் விழுந்தவர்களில் நானும் ஒருவன். பணப் பெட்டியைப் பறிகொடுத்தேன். பசியால் மெலிந்தேன் நலிந்தேன், கடைசியில் பைத்தியமாக மாறினேன்.
காண வந்த தங்கையைக் கண்டேன். கண்ணற்ற ஓவியமாக. ஆம் கைம்பெண்ணாக, தங்கையின் பெயரோ கல்யாணி. மங்களகரமான பெயர். ஆனால் கழுத்திலே மாங்கல்யமில்லை. செழித்து வளர்ந்த குடும்பம் சீரழிந்துவிட்டது. கையில் பிள்ளை. கண்களிலே நீர். கல்யாணி அலைந்தாள். கல்யாணிக்காக நான் அலைந்தேன்.
கல்யாணிக்குக் கருணை காட்டினர் பலர். அவர்களிலே காளையர் சிலர் அவளுடைய காதலைக் கேட்டனர். கொலை வழக்கிலே ஈடுபட்டு உங்கள் முன் நிற்கிறானே இக்கொடியவன் வேணு, இவன் பகட்டால் என் தங்கையைக் கற்பழிக்க முயன்றான். நான் தடுத்திராவிட்டால் கல்யாணி அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்.
கடவுள் பக்தர்களும் கல்யாணிக்குக் கருணை காட்ட முன்வந்தார்கள். பிரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையைக் கேட்டனர். அதில் தலையானவன் இந்தப் பூசாரி. கல்யாணியின் கற்பைக் காணிக்கையாகக் கேட்டிருக்கிறான்பராசக்தியின் பெயரால், உலக மாதாவின் பெயரால். கல்யாணி உலகத்தில் புழுவாகத் துடித்தபடியாவது உயிரோடு இருந்திருப்பாள். அவளைத் தற்கொலை செய்து கொள்ளத் தூண்டியது இந்த பூசாரிதான். தன் குழந்தையை இரக்கமற்ற உலகத்தில் விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை. தன் குழந்தை ஆதரவற்றுத் துடித்துச் சாவதைக் காண அவள் விரும்பவில்லை. அவளே கொன்றுவிட்டாள். விருப்பமானவர்களைக் கொல்வது விந்தையல்ல. உலக உத்தமர் காந்தி, அஹிம்சா மூர்த்தி ஜீவகாருண்ய சீலர், அவரே நோயால் துடித்துக் கொண்டிருந்த கன்று குட்டியைக் கொன்றுவிடச் சொல்லியிருக்கிறார், அது கஷ்டப்படுவதைக் காணச் சகிக்காமல். அந்த முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி. இது எப்படி குற்றமாகும்?
என் தங்கை விட்டுக் கொடுத்திருந்தால், கோடீஸ்வரன் பள்ளியறையிலே ஒரு நாள்மானத்தை விலை கூறியிருந்தால், மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள்இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை. இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது?
பகட்டு என் தங்கையை மிரட்டியது. பயந்து ஓடினாள். பணம் என் தங்கையைத் துரத்தியது. மீண்டும் ஓடினாள். பக்தி என் தங்கையை பயமுறுத்தியது. ஓடினாள் ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள். அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்கவேண்டும். வாட்டத்தைப் போக்கியிருக்கவேண்டும். இன்று சட்டத்தை நீட்டுவோர். செய்தார்களா? வாழவிட்டார்களா என் கல்யாணியை?
அரசு வக்கீல்: குற்றவாளி யார் யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்.
குணசேகரன்: யார் வழக்கிற்குமில்லை. அதுவும் என் வழக்குதான். என் தங்கையின் வழக்கு. தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு? கல்யாணி தற்கொலை செய்துகொள்ள முயன்றது ஒரு குற்றம். குழந்தையைக் கொன்றது ஒரு குற்றம். நான் பூசாரியைத் தாக்கியது ஒரு குற்றம். இத்தனைக் குற்றங்களுக்கும் யார் காரணம்? கல்யாணியைக் கஞ்சிக்கில்லாமல் அலையவிட்டது யார் குற்றம்? விதியின் குற்றமா? அல்லது விதியின் பெயரைச் சொல்லி வயிறு வளர்க்கும் வீணர்களின் குற்றமா? பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளரவிட்டது யார் குற்றம்? பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்கு வரவழைக்கும் வஞ்சகர்களின் குற்றமா? கடவுள் பெயரால் காம லீலைகள் நடத்தும் போலிப் பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுளின் பெயரைச் சொல்லி காலட்சேபம் நடத்தும் கயவர்களின் குற்றமா? இக்குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும் கல்யாணிகளும் குறையப்போவதில்லை. இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப் பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்.
கலைஞர்

வியாழன், 13 செப்டம்பர், 2018

முகநூலில் உலவும் மூடநம்பிக்கை


கரி நாள் என்றால் என்ன?

தமிழ் பஞ்சாங்கங்களில் மட்டும் கரி நாள் என்றொரு விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் சௌரமான மாதங்கள் நடைமுறையில் கடைபிடிக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற பகுதிகளில் சந்திரமான மாதங்கள் நடைமுறையில் உள்ளன. சௌரம் என்றால் சூரியன் என்று பொருள். அதாவது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் கணக்கிடப்படும் மாதங்கள் சௌரமான மாதங்களாகும். தமிழ் மாதங்கள் சௌரமான மாதங்களாகும்
தமிழ் மாதங்களின் ஒரு குறிப்பிட்ட தேதிகள் கரி நாட்களாக தமிழ் பஞ்சாங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.அந்த விவரம் கீழே தரப்பட்டுள்ளன.
சித்திரை - 6,15
வைகாசி – 7,16,17
ஆனி – 1,6
ஆடி – 2,10,20
ஆவணி – 2,9,28
புரட்டாசி – 16,29
ஐப்பசி – 6,20
கார்த்திகை – 1,4,10,17
மார்கழி – 6,9,11
தை – 1,2,3,11,17
மாசி – 15,16,17
பங்குனி – 6,15,19
கரி நாளைமாத தியாஜ்ஜியம்என குறிப்பிடுவர். ‘தியாஜ்ஜியம்என்றால்விலக்கப்பட வேண்டியதுஎன்று பொருள். முகூர்த்த நூல்களில் லக்கின தியாஜ்ஜியம், வார தியாஜ்ஜியம், திதி தியாஜ்ஜியம், நட்சத்திர தியாஜ்ஜியம் என சுப காரியங்களுக்கு விலக்கப்பட வேண்டிய காலங்களை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. அதுபோல் கரி நாள் என்பது மாத தியாஜ்ஜியமாகும். இந்த தியாஜ்ஜிய காலங்கள் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டன என்பதற்கான விளக்கம் எந்த ஒரு ஜோதிட நூல்களிலும் கொடுக்கபடவில்லை.
உதாரணமாக அக்னி நட்சத்திரம் என்பது சூரிய சஞ்சாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுவதாகும். அதாவது சூரியன் சில குறிப்பிட்ட பாகைகளில் செல்லும் நாட்கள் அக்னி நட்சத்திர நாட்களாக எடுத்துக்கொள்ளப்பட்டு, அந்நாட்களில் சுப காரியங்கள் தவிர்க்கபடுகின்றன. அது போல் கரி நாள் என்பதும் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகும்

சித்திரை மாதம் முதல் தேதி சூரியன் தன் சஞ்சாரத்தை மேசத்தில் தொடங்குவான். நாளுக்கு ஒரு பாகை வீதம் சூரியன் ராசிகளில் நகர்ந்து செல்வான். சித்திரை 1ல் சூரியன் மேசம் 1 வது பாகையில் இருப்பான், சித்திரை 6ல் சூரியன் மேசம் 6 வது பாகையில் இருப்பான். அதாவது ராசி மண்டலத்தில் சூரியன் நகர்ந்து செல்லும் ஒரு சில பாகைகள் (டிகிரிகள்) அசுபத்தன்மையுடையதாக நம் ரிஷிகள் நிர்ணயித்திருக்கலாம் என்பது என்னுடைய யூகம் மட்டுமே முடிவல்ல

தை மாதம் முதல் மூன்று நாட்களும் தமிழகத்தில் சூரியனுக்குரிய விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் அந்த மூன்று நாட்களும் கரி நாட்களாக பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரி நாட்கள் சூரிய சஞ்சாரத்தை அடிப்படையாக கொண்டதாகக்கருதலாம். எனவே கரி நாட்கள் என்பதை வெறும் தமிழ் தேதிகளாக கருதாமல், சூரியனின் சஞ்சார பாகைகளாக (டிகிரிகளாக) எடுத்துக்கொள்ளலாம்.

கரி நாட்களைப்போன்றதே தனிய நாட்களாகும். எனவே மேற்கண்ட விளக்கங்கள் தனிய நாட்களுக்கும் பொருந்தும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...