google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பிப்ரவரி 2023

சனி, 4 பிப்ரவரி, 2023

சேது சமுத்திர திட்டம்

 சேது சமுத்திர திட்டத்தின் தேவை

சேது சமுத்திர திட்டம் என்பது பாக் ஜலசந்தியும் மன்னார் வளைகுடாவும் இணைக்கும் ஆடம்ஸ் பாலத்தின் குறுக்கே வெட்டப்பட வேண்டிய கால்வாயின் பெயராகும். ஆங்கிலேயே 1860ம் ஆண்டு இது உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தினால் தென் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பல மடங்கு உயரும் என்பது ஆய்வாளர்களின் ஒருமித்த கருத்து.

1963ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் நாள் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோது பண்டித நேரு அவர்களின் அமைச்சரவைக் கூட்டத்தில் சேது திட்டத்தை நான்காவது ஐந்தாண்டு திட்டத்தின் முன் நடவடிக்கைப் பட்டியலில் சேர்த்தும் கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது.

நம்முடைய அருமைத் தலைவர் பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ம் ஆண்டு தேர்தலிலே வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தபோது தம்பிக்கு எழுதிய மடலில்சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை நிறைவேற்றினால் வர்த்தகம் பெருகும், இலங்கையைச் சுற்றிக் கொண்டு கப்பல்கள் போக வேண்டிய நீளம் குறையும்; இங்கேயுள்ள மீனவர்கள் வாழ்வு செழிக்கும், தமிழ்நாடு எல்லா வளமும் பொருந்திய நாடாக மாறும்என்றெல்லாம் தாம் கனவு கண்டதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்கள்.

தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுக வேலைகள் சுணக்கமுற்று மீன்பிடித் துறைமுகமாக மாற்ற முயற்சி நடந்தபோது, 1967-ம் ஆண்டு சென்னை வந்த மத்திய கப்பல் துறை அமைச்சர் திரு.வி.கே ஆர்.வி.ராவ் அவர்களை அவர் தங்கியிருந்த இடத்திற்கே அண்ணா அவர்கள் தேடிச் சென்று சந்தித்தார். அப்போது முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் அவர்களையும் முன்னாள் தொழில்துறை அமைச்சர் ஆர்.வெங்கட்ராமன் அவர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்று துறைமுகம் நஷ்டத்தில் இயங்கும் நிலை வந்ததால் அந்த நஷ்டத்தை மாநில அரசே ஏற்கும் என்ற உறுதியையும் தந்து தூத்துக்குடி ஆழ்கடல் துறைமுகம் வருவதற்கு பாடுபட்டார்.

1972-ம் ஆண்டு தூத்துக்குடி துறைமுக நுழைவு வாயிலில் ..சி சிலையை திருமதி இந்திரா காந்தி அம்மையார் முதல்வராக இருந்த தலைவர் கலைஞர் தலைமையில் திறந்து வைத்தார். அப்போது தூத்துக்குடி துறைமுகத்தின் பயன் மேலும் வளர சேது சமுத்திர கால்வாய் திட்டம் மிக மிக அவசியம் என்பதை கலைஞர் அவர்கள் திருமதி. இந்திரா காந்தி அம்மையாரிடம் எடுத்துரைத்தார்கள்.

அண்ணா அவர்களின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் தலைவர் கலைஞர் அவர்கள் 2004ல் அமைந்த திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மூலம் 2427 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டத்தை கொண்டு வந்து புதிய சரித்திரம் படைத்தார்கள். இந்த ஆதாம் பாலம் எனப்படும் பாறைகளை 40 அடி ஆழத்திற்கும் 300 மீட்டர் அகலத்திற்கும் வெட்டப்பட்டு கால்வாய் அமைத்து அதன் வழியாக கப்பல்களை இயக்கிட திட்டமிடப்பட்டது.

மத்திய சுற்றுச்சூழல் மற்றும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்களுடன் 2005-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி அன்று தலைவர் கலைஞர் தலைமையில் இந்தி பிரதமர் மன்மோகன் சிங்கும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வழிகாட்டித் தலைவர் சோனியா காந்தியும் கலந்துக் கொண்டு சேது சமுத்திர கால்வாய் திட்டத்திற்கு அடிக்கல நாட்டினார்கள். இந்த விழாவில் கலந்துக் கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்திருந்தும், அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் அதில் கலந்து கொண்டு வாழ்த்தாமல், அதனை புறக்கணித்து விட்டார்கள். மத்திய நிதியமைச்சர் .சிதம்பரம், பாமக தலைவைர் இராமதாஸ், மதிமுக தலைவர் வைகோ, சிபிஎம் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட் தா.பாண்டியன், அன்புமணி ராமதாஸ் ஆகிய அனைத்து கட்சி தலைவர்களும் இவ்விழாவில் கலந்து கொண்டு இந்த நாளை தங்கள் வாழ்நாளில் மறக்க முடியாது என்று வாழ்த்தினார்கள்.

2006ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கலைஞர் முதல்வர் பொறுப்பேற்ற நிலையில் சேது சமுத்திர திட்டத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்/ தடைகள் எல்லாவற்றையும் எதிர்கொண்டு இதன் திட்டப்பணிகள் பாதிக்கு மேல் சுறுசுறுப்பாக எதிர்கொண்டு இதன் திட்டப்பணிகள் பாதிக்கு மேல் சுறுசுறுப்பாக நடைபெற்று வந்தன.

2011ல் முதலமைச்சரான ஜெயலலிதா நல்ல பெயர் வந்துவிடுமே என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இத்திட்டத்திற்கு பல வழிகளிலும் முட்டுக்கட்டைகளையே போட்டு வந்தார். 2014 பாராமன்ற தேர்தலில் 38 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றது. ஜெயலலிதா அம்மையாருக்கு சாதகமாக அமைந்து விட்டது. மத்திய ஆட்சிப் பீடம் ஏறிய திரு.மோடி தலைமையிலான பிஜேபி அரசோடு கைகோர்த்துக் கொண்டு, “ஆடம்ஸ் பிரிட்ஜ் என்பது ராமர் பாலம், அதை உடைத்து விட்டு சேது சமுத்திர கால்வாய் அமைய விடமாட்டோம். சேது சமுத்திர திட்டத்தினால் தமிழகத்திற்கு எந்த விதமான பயனும் கிடையாது. யாருக்கும் எதற்கும் பயனில்லாத திட்டம். மீன்பிடி தொழில் பாதித்து மீனவர்களின் வாழ்வாதாரமே ஒடுக்கப்பட்டுவிடும்என்றெல்லாம் சேது சமுத்திர திட்டத்தை கொச்சைப்படுத்தி பொல்லாத பொய்க் காரணங்களை கற்பித்து 2014 முதல் சேது சமுத்திர பணிகளை முற்றிலும் முடக்கிப் போட்டு விட்டார்கள்.

ஆனால் இதற்கு முன்னர் 2001 பாராளுமன்ற தேர்தலின்போது அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “சேது சமுத்திர திட்டத்தால் நம் நாடு மட்டுமல்ல; தென்கிழக்கு ஆசிய நாடுகளும் கடலோர பகுதிகளில் அமைந்துள்ள நாடுகள் அனைத்தும் பயனடையும். வாணிபமும் தொழிலும் பெருகும். அந்நிய முதலீடு அதிகரிக்கும். அந்நிய செலாவணி அதிகம் கிடைக்கும். கப்பலின் பயண தூரம் வெகுவாகக் குறைவதால் எரிபொருளும் பயண நேரமும் மிச்சமாகும். ஏற்றுமதி இறக்குமதி அதிகரிக்கும். குறிப்பாக ராமநாதபுரம் போன்ற மிகமிகப் பிற்பட்ட தமிழக தென்பகுதி மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்படும். வேலை வாய்ப்பு பெருகும். தூத்துக்குடி துறைமுகம் சர்வதேச அளவில் விரிவடையும். சுற்றுலா வளர்ச்சியடையும். என்றெல்லாம் வானளாவ புகழ்ந்தார்கள். அத்துடன் நிற்காமல் ஒரு படி மேலே போய், “இந்திய தீபகற்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியாக கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல்வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வாக அமைவதுதான் சேது சமுத்திர திட்டம். இத்திட்டத்தின்படி ராமேசுவரத்திற்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையில் ஆடம்ஸ் பிரிட்ஜ் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு தடையாக உள்ள மணல் மேடுகள், பாறைகளை அகற்றி ஆழப்படுத்தி கால்வாய் அமைப்பது சேது சமுத்திர திட்டத்தின் தலையாய நோக்கம். என்று விளக்கம் கொடுத்து அமைய இருக்கும் மத்திய ஆட்சியில் அதனை நிறைவேற்றித் தருவதாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்திருந்தார்.

அதேபோன்ற 2004 பாராளுமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையிலும், “மத்திய பிஜேபி தேசிய முன்னணி ஆட்சியில் 5 ஆண்டுகளாக அங்கம் வகித்த திமுக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற தவறி விட்டது.  என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். மேலும், அமையவிருக்கும் மத்திய அரசியல் சேது சமுத்திர திட்டத்திற்கு போதிய நிதியினை ஒதுக்கி ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் இத்திட்டத்தினை நிறைவேற்றிட அதிமுக வலியுறுத்தும். என்று உறுதிமொழியையும் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் அப்போது கொடுத்திருந்தார்கள். அப்போதைய நிலையிலும் ஆடம்ஸ் பிரிட்ஜ் என்பது ராமர் பாலம் என்பது அம்மையாருக்கு விளங்காமல் போய்விட்டது. சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை கொண்டு வந்த தலைவர் கலைஞரின் சாதனையை முறியடிக்க வேண்டும். என்பதுதான் அம்மையாரின் நோக்கமே தவிர மக்கள் நல திட்டமாயிற்றே என்ற கவலை அம்மையாருக்கு துளியும் கிடையாது.

நாகபுரியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய சுற்றுச் சூழல் பொறியியல் ஆய்வு நிறுவனம் (National Environmental Engg Research Institute (NEERI) சேது சமுத்திர கால்வாய் அமைக்க 5 மாற்றுப் பாதைகளைப்  பரிசீலித்தது. அவற்றுள் 1,2,3 ஆகியவை ஆரம்பத்திலேயே நிராகரிக்கப்பட்டன. பாதை எண்.4 ராமேஸ்வரம் தீவின் குறுக்கே கந்தசாமி கோயிலுக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே செல்வதாக தயாரிக்கப்பட்டது. உயிரியல் வனங்களுக்கும் கடலோர இயற்கை சூழ்நிலைக்கம் பாதிப்புகளை ஏற்படுத்தும். என்று கூறி பாதை எண் நான்கிற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டது. பாதை எண்.5 தனுஷ்கோடியை சுற்றி செல்வதாகும். சுற்றுச்சூழல் புவியியல் உள்ளிட்ட அனைத்தையும் ஆராய்வதன் மூலம் கால்வாய் செல்லும் வழி தனுஷ்கோடி தீவிலிருந்து மிகவும் தொலைவில் இருப்பதே சிறந்ததாகும் என்பதால் பாதை எண்.5ம் தேவையற்றதாகி விட்டது.

எனவே மன்னார் வளைகுடாவில் தூத்துக்குடி புதிய துறைமுகத்திலிருந்து இந்த கால்வாய் தொடங்கப்பட்டு கிழக்கு நோக்கியும் பின் தெற்கு பாம்பன் தீவு வரை வடகிழக்கு நோக்கியும் பின் ஆதாம் பாலத்தின் குறுக்காகவும் வெட்டப்பட்டு அங்கிருந்து வங்காள விரிகுடாப் பகுதியில் அமையும் கால்வாயுடன் இறுதியாக சேரும் வரை சர்வதேச மீடியல் லைனுக்கு (International Media Line) இணையாக செல்ல வேண்டும், எனும் புதிய பாதை எண் 6க்கு வாஜ்பாய் அவர்கள் தலைமையிலான பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டது.

மேற்கண்ட புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அப்போதைய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.அருண் ஜெட்லி அவர்கள் 9.3.2001 அன்று ஒப்புதல் அளித்தார். என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவர் கலைஞர் கேள்வி தற்போதுள்ள 6வது பாதை பா.. அரசினால் தான் முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர்களே இந்த பாதைக்கு ஒப்புதல் தந்து விட்டு தற்போது ராமர் பாலம் என்று அவர்கள் ஒப்புக் கொண்ட திட்டத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களை நாம் கேட்க விரும்புவதெல்லாம் பாஜகவின் மத்திய அரசு 2002-ம் ஆண்டு இத்திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கிய போது இது ராமர் பாலம் உள்ள இடம், இங்கே திட்டத்தை நிறைவேற்றக் கூடாது. என்று ஏன் சொல்லவில்லை? அவர்கள் ஆட்சியில் பரிசீலிக்கப்பட்டு முடிவு செய்யப்பட்டவாறே, அவர்கள் ஆட்சியிலேயே இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் அப்போது மட்டும் ராமர் பாலம் என்று சொல்ல மாட்டார்களா? காங்கிரசு ஆட்சியும், திமுக ஆட்சியும் சேர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் அப்போது மட்டும் தான் ராமர் பாலமா? பாஜகவும் அதிமுகவும் சேர்ந்து நிறைவேற்றினால் அப்போது மட்டும் ராமர் பாலம் என்பது கிடையாதா? சேது சமுத்திர திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சுற்றுச்சூழல் ஒப்புதல் பெறுவதற்காக 2004 செப்டம்பர் முதல் 2005 பிப்ரவரி வரை 6 கடலோர மாவட்டங்களில் பொதுமக்கள் கருத்தறியும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இக்கூட்டங்கள் 3 சுற்றுகளாக 14 இடங்களில் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டங்கள் எதிலும் ஒருமுறை கூட ஒருவராலும்ராமர் பாலம்என்ற பெயர் உச்சரிக்கப்படவேயில்லை.

இறுதியாக 31.3.2004 அன்று மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சகம் தனது முறையான நடைமுறைகளுக்கும் விரிவான ஆய்வுகளுக்கும் பிற இத்திட்டத்திற்கான சுற்றுச்சூழல் ஒப்புதலை வழங்கியது.

சேது சமுத்திர திட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு தலைவர் டாக்டர் எஸ். கண்ணையன் 25.4.2007 அன்று செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில்,  ராமர் பாலம் என்றழைக்கப்படும் ஆதாம் பாலத்தின் 70 இடங்களில் 20 மீட்டர் ஆழத்திற்கு பாறை மாதிரிகளை ஜியோ கெமிக்கல் முறையில் சோதனை செய்தோம். அதில் கடலில் உள்ள படிமங்கள் தான் உள்ளன. அறிவியல் ரீதியாக ராமர் பாலத்தை மனிதர்கள் உருவாக்கியதற்கான எந்த அடையாளங்களும் இல்லை. பாலம் இருக்கும் இடத்திற்கு பதிலாக வேறு இடத்தில் கால்வாய் தோண்டினால், மன்னார் வளைகுடா பகுதியில் இருக்கும் 26 தீவுகளும் அழிந்துவிடும் வாய்ப்பு அதிகம்என்று தெரிவித்திருக்கிறார்.

இந்திய தீபகர்பத்தைச் சுற்றி இதுவரை தொடர்ச்சியாக கப்பல் போக்குவரத்திற்கு ஏற்ற பாதைகள் இல்லை. மேற்கிலிருந்து கடல் வழியாக கிழக்கு நோக்கி கப்பல்கள் செல்ல வேண்டுமானால் இலங்கையைச் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டியுள்ளது. சேது சமுத்திர கால்வாய் அமைந்தால் கப்பல்கள் செல்ல வேண்டிய தூரம் குறையும்.

தூத்துக்குடி துறைமுகத்திலிந்து சென்னை துறைமுகத்திற்குச் சென்றால் 434 மைல் தூரம் மிச்சப்படும். தூத்துக்குடியிலிருந்து விசாகப்பட்டினம் துறைமுகம் சென்றால் 376 மைல் தூரம் மிச்சப்படும். தூத்துக்குடியிலிருந்து கல்கத்தா துறைமுகம் சென்றால் 340 மைல் தூரம் மிச்சப்படும்.

இக்கால்வாயினால் பயணம் செய்யும் தூரம் குறைவதால் கப்பலில், எரிபொருள் மிச்சப்படும். இதனால் இந்தியாவில் அன்னியச் செலாவணிச் செலவில் சுமார் 130 கோடி ரூபாய் ஒவ்வொரு ஆண்டும் மிச்சப்படும்.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் இந்துமகா சமுத்திரமும் வங்க கடலும் இணைய வாய்ப்புள்ளது. மேலும் இந்திய எல்லைக்குள் ஒரு கடல்வழி நெடுஞ்சாலை இல்லை. என்ற குறை நீங்கிவிடும்.

தற்போது கப்பல்கள் யாவும் இலங்கையைச் சுற்றி செல்கின்றன. இதனால் புயல் அபாயங்களில் சிக்கிக் கொள்ள நேர்கிறது. சேதுக் கால்வாய் மூலமாக கப்பல்கள் சென்றால் புயல் அபாயம் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை.

இந்த கால்வாய் வெட்டப்பட்டால் இந்தியாவின் தென்பகுதியில் அன்னிய சக்திகள் ஊடுருவாமல் இது ஓர் அரணாக விளங்கும்.

மன்னார் வளைகுடாவிலிருந்து பாக் கடலுக்குச் சென்றுவர தடையின்றி வழி கிடைக்கும். கால்வாயில் கப்பல்கள் தவிர மீனவர்களின் படகுகளும் செல்ல அனுமதிக்கப்படும்.

தமிழக கடலோரப் பகுதிகளில் தொழில வளர்ச்சி பெருகும். பொருளாதாரம் வளர்ச்சியடையும். எந்த ஒரு பகுதியும் தொழில் வளர்ச்சி அடையும்பொழுது அதனால் உடனடியாக பயன் பெறப்போவது அப்பகுதி மக்கள்தான். அந்த வகையில் சேது கால்வாய் திட்டத்தால் கடலோர மாவட்ட மக்கள் பெரிதும் பயன்பெறுவர். இதில் மீனவர்களும் அடங்குவர்.

கால்வாய் திட்டம் அதைச் சார்ந்து சிறு திட்டங்கள் ஆகியவற்றில் ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பும் 50 ஆயிரம் பேருக்கு மறைமுக வேலையும் கிடைக்கும்.

இந்தியாவின் கடலோர வணிகம் மேம்பாடு அடையும். இதனால் எல்லா துறைகளிலும் தொழில் உற்பத்தியும் வேலை வாய்ப்புகளும் பெருகும்.

பல்வேறு வகைகளில் அன்னிய செலாவணி மீதமாகும். அன்னிய செலாவணி வருவாயும் அதிகாரிக்கும்.

இந்திய கிழக்கு கடற்கரை துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி இறக்குமதியில் சரக்கு போக்குவரத்து செலவு குறையும். எனவே உலக சந்தையில் நம்முடைய ஏற்றுமதிப் பொருட்கள் போட்டிபோட முடியும். இறக்குமதியாகும் கச்சாப் பொருட்களின் விலை குறையும் என்பதால் உற்பத்தி பொருட்களின் விலையும் குறையும்.

நிலம் வழியாக செல்லும் நிலக்கரி, சிமெண்ட், உப்பு,  உரங்கள், கடல் உணவு வகைகள், பருப்பு வகைகள், பருத்தி போன்ற பொருட்களைக் கிழக்கு கடற்கரை மார்க்கமாக இந்தியாவின் பிற பகுதிகளுக்கு கொண்டு செல்ல இக்கால்வாய் மிகவும் உதவியாக இருக்கும்.

சேதுக் கால்வாய் திட்டமும தூத்துக்குடி துறைமுகத் திட்டமும் ஒருங்கிணைந்தவைகளாகும். சேது சமுத்திர திட்டத்தைச்  செயல்படுத்தினால் தூத்துக்குடி துறைமுக வளர்ச்சி முழு அளவு அதிகரிக்கும். அதன் மூலம் நெல்லை, தூத்துக்குடி, விருதுநர், காரைக்குடி, திருப்பத்தூர், மதுரை, நாகர்கோவில் ஆகிய பிற்படுத்தப்பட்ட பகுதிகள் முழுவதும் தொழில் ரீதியாக வளர்ச்சி பெறும்.

மீனவர்களுக்கு நேரடியாக பயன்படும் வகையில் தூத்துக் குடிக்கும் நாகப்பட்டினத்துககும் இடையில் மீன்பிடி துறைமுகங்கள் தேவைக்கேற்ப உண்டாகும்.

இந்த கால்வாயின் மூலம் தமிழகத்தில் குளச்சல், முட்டம், தூத்துக்குடி, இராமேசுவரம், நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், பாண்டிச்சேரி, சென்னை மற்றும் விசாகப்பட்டினம், கல்கத்தா வரையுள்ள கிழக்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வளர்ச்சி அடையும்.

தொண்டியில் 16 கோடி செலவில் சிறு கப்பல்கள் தங்கும் தளம் முத்துப்பேட்டையில் சிறு சிறு மீன்பிடித் துறைமுகங்கள் தனுஷ்கோடியில் 16 கோடி ரூபாய் செலவில் மீன்பிடித் துறைமுகம் மீனவர்களின் வளர்ச்சிக்காக அமையும்.

 இராமநாதபுரத்தில் ஒரு புதிய சிறு துறைமுகம் அமையும். புதியதாக மீன்பிடித் துறைமுகங்கள் உருவாவதால் அவற்றைச் சார்ந்து குளிர்பதன சேமிப்பு கிடங்குகள், மீன் பதப்படுத்தும் தொழிற்சாலைகள் அமையும். அதனால் மீனவர்கள் பிடிக்கும் மீன்களுக்கு நல்ல விலை கிடைக்கும்.

தூத்துக்குடி துறைமுகத்தை எடுத்துக் கொண்டால் அதனால் மிகுந்த பயன்பெற்றவர் மீனவ இனத்தவர்தான். அங்குள்ள முகவர்களில் பெரும்பாலோர் மீனவ இனத்தைச் சேர்ந்தவர்கள்தான். 30 ஆண்டுகளுக்கு முன் முகவர்களாக இருந்தவர்கள் இன்று முதலாளிகளாக இருக்கிறார்கள். அதைப்போல சேது கால்வாய் திட்டத்தால் இன்று சாதாரணமாய் மீன்பிடித் தொழிலில் இருக்கும் கடலோர மாவட்டங்களைச் சார்ந்த பல மீனவர்கள் தொழிலதிபர்களாக மாறும் வாய்ப்பு ஏற்படும்.

சேது சமுத்திரக் கால்வாய் இந்திய இலங்கை கடல் எல்லையைச் சார்ந்து அமையப் போவதால் எல்லை தெரியாமல் மீனவர்கள் இலங்கைக் கடல் பகுதியில் சென்று அங்குள்ள கடற்படையினரிடம் அவதிக்குள்ளாகும் நிலை மாறும்.

இக்கால்வாய் ஒரு சுற்றுலா மையமாக அமைந்து உலகின் பிற பகுதிகளிலிருந்து பயணிகளை ஈர்க்க வாய்ப்புள்ளது.

நன்றி: https://kalaignar.dmk.in/




தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...