google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: ஜனவரி 2024

புதன், 31 ஜனவரி, 2024

நரம்பு ஊசி என்பது தவறு

 சாலையோர உணவகத்தில் இன்று (31 ஜனவரி 2024) இட்லிப் பொட்டலம் வாங்கினேன். சாப்பிட்டபின் பொட்டலத்துச் செய்தித்தாளில் இருப்பதை வாசிப்பது என் வழக்கம். அது, 8. 10. 2023 ஆம் தேதிய மதுரை தினமலர் நாளிதழ்.  அதிலுள்ள ஒரு செய்தி இரத்தக்குழாய் ஊசி தொடர்பானது. பொதுவாக நாம் எல்லோரும் இரத்தக்குழாய் ஊசி என்பதை, தவறாக, நரம்பு ஊசி என்கிறோம். vein என்பது  சிரை ஆகும். இது ஒரு இரத்த நாளம். பிராண வாயு குறைந்த குருதியை (ஆக்சிஜன் குறைவாயுள்ள இரத்தத்தை) இது நுரையீரலுக்கு எடுத்துச் செல்லும். இது நரம்பு அல்ல. தசையில் ஊசி போடுவதைப்போல இந்தக் குழாயிலும் ஊசி போடுவார்கள். எல்லா ஊசிகளையும் இதில் போட்டுவிட மாட்டார்கள். இதில் ஊசி போட்டால் ஊசி மருந்து வேகவேகமாகப் பயனளிக்கும். ஆகவே, அறிஞர்கள் தயவுசெய்து மக்களுக்கும் மீடியாவுக்கும் அறிவுறுத்தி நரம்பு ஊசி என்பதை சிரை ஊசி என்றோ,  இரத்தக்குழாய் ஊசி என்றோ குருதி நாள ஊசி என்றோ அல்லது வேறு சரியான பெயரில் சொல்ல அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.





திங்கள், 22 ஜனவரி, 2024

திருவாசகம் எட்டாம் திருமுறை

 திருவாசகம் எட்டாம் திருமுறை 08.003 திருவண்டப்பகுதி

அ௫ளியவர்:  மாணிக்கவாசகர்

நாடு: சோழநாடு காவிரி வடகரை

தலம்: கோயில் (சிதம்பரம், தில்லை) 

சிறப்பு: சிவனது தூல சூக்குமத்தை வியந்தது

இணைக்குறள் ஆசிரியப்பா.

 

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்

அளப்பருந் தன்மை வளப் பெருங் காட்சி

ஒன்றனுக்கு ஒன்று நின்றெழில் பகரின்

நூற்று ஒரு கோடியின் மேற்பட விரிந்தன

இல்நுழை கதிரின் துன்அணுப் புரையச் 5

 

சிறிய ஆகப் பெரியோன் தெரியின்

வேதியன் தொகையொடு மாலவன் மிகுதியும்

தோற்றமும் சிறப்பும் ஈற்றொடு புணரிய

மாப்பேர் ஊழியும் நீக்கமும் நிலையும்

சூக்கமொடு தூலத்துச் சூறை மாருதத்து 10

 

எறியது வளியின்

கொட்கப் பெயர்க்கும் குழகன் முழுவதும்

படைப்போற் படைக்கும் பழையோன் படைத்தவை

காப்போற் காக்கும் கடவுள் காப்பவை

கரப்போன் கரப்பவை கருதாக் 15

 

கருத்துடைக் கடவுள் திருத்தகும்

அறுவகைச் சமயத்து அறுவகை யோர்க்கும்

வீடுபேறாய் நின்ற விண்ணோர் பகுதி

கீடம் புரையும் கிழவோன் நாள் தொறும்

அருக்கனில் சோதி அமைத்தோன் திருத்தகு 20

 

மதியில் தண்மை வைத் தோன் திண்திறல்

தீயில் வெம்மை செய்தோன் பொய்தீர்

வானில் கலப்பு வைத்தோன் மேதகு

காலின் ஊக்கம் கண்டோன் நிழல் திகழ்

நீரில் இன்சுவை நிகழ்ந்தோன் வெளிப்பட 25

 

மண்ணில் திண்மை வைத்தோன் என்று என்று

எனைப் பல கோடி எனைப் பல பிறவும்

அனைத்து அனைத்து அவ்வயின் அடைத்தோன் அஃதான்று

முன்னோன் காண்க முழுதோன் காண்க

தன்நேர் இல்லோன் தானே காண்க 30

 

ஏனத் தொல் எயிறு அணிந்தோன் காண்க

கானப் புலியுரி அரையோன் காண்க

நீற்றோன் காண்க நினைதொறும் நினைதொறும்

ஆற்றேன் காண்க அந்தோ கெடுவேன்

இன்னிசை வீணையில் இசைந்தோன் காண்க 35

 

அன்னது ஒன்று அவ்வயின் அறிந்தோன் காண்க

பரமன் காண்க பழையோன் காண்க

பிரமன்மால் காணாப் பெரியோன் காண்க

அற்புதன் காண்க அநேகன் காண்க

சொற்பதங் கடந்த தொல்லோன் காண்க 40

 

சித்தமும் செல்லாச் சேட்சியன் காண்க

பத்தி வலையில் படுவோன் காண்க

ஒருவன் என்னும் ஒருவன் காண்க

விரிபொழில் முழுதாய் விரிந்தோன் காண்க

அணுத்தரும் தன்மையில் ஐயோன் காண்க 45

 

இணைப்பரும் பெருமையில் ஈசன் காண்க

அரியதில் அரிய அரியோன் காண்க

மருவி எப்பொருளும் வளர்ப்போன் காண்க

நூல் உணர்வு உணரா நுண்ணியோன் காண்க

மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க 50

 

அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க

பந்தமும் வீடும் படைப்போன் காண்க

நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க

கற்பமும் இறுதியும் கண்டோன் காண்க

யாவரும் பெற உறும் ஈசன் காண்க 55

 

தேவரும் அறியாச் சிவனே காண்க

பெண்ஆண் அலிஎனும் பெற்றியன் காண்க

கண்ணால் யானும் கண்டேன் காண்க

அருள்நனி சுரக்கும் அமுதே காண்க

கருணையின் பெருமை கண்டேன் காண்க 60

 

புவனியில் சேவடி தீண்டினன் காண்க

சிவன் என யானும் தேறினன் காண்க

அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க

குவளைக் கண்ணி கூறன் காண்க

அவளுந் தானும் உடனே காண்க 65

 

பரமா னந்தப் பழங் கடலதுவே

கருமா முகிலின் தோன்றித்

திருவார் பெருந்துறை வரையில் ஏறித்

திருத்தகு மின்ஒளி திசைதிசை விரிய

ஐம்புலப் பந்தனை வாளரவிரிய 70

 

வெம் துயர்க் கோடை மாத்தலை கரப்ப

நீடு எழில் தோன்றி வாள் ஒளி மிளிர

எம்தம் பிறவியில் கோபம் மிகுத்து

முரசு ஏறிந்து மாப்பெருங் கருணையில் முழங்கிப்

பூப்புரை அஞ்சலி காந்தள் காட்ட 75

 

எஞ்சா இன்னருள் நுண்துளி கொள்ளச்

செஞ்சுடர் வெள்ளம் திசைதிசை தெவிட்ட வரையுறக்

கேதக் குட்டம் கையற வோங்கி

இருமுச் சமயத்து ஒரு பேய்த் தேரினை

நீர்நசை தரவரும் நெடுங்கண் மான்கணம் 80

 

தவப்பெரு வாயிடைப் பருகித் தளர்வொடும்

அவப்பெருந் தாபம் நீங்காது அசைந்தன

ஆயிடை வானப் பேரியாற்று அகவயின்

பாய்ந்து எழுந்து இன்பப் பெருஞ்சுழி கொழித்துச்

சுழித்து எம்பந்தமாக் கரைபொருது அலைத்திடித்து 85

 

ஊழ் ஊழ் ஓங்கிய நங்கள்

இருவினை மாமரம் வேர் பறித்து எழுந்து

உருவ அருள்நீர் ஓட்டா அருவரைச்

சந்தின் வான்சிறை கட்டி மட்டவிழ்

வெறிமலர்க் குளவாய் கோலி நிறையகில் 90

 

மாப்புகைக் கரைசேர் வண்டுடைக் குளத்தின்

மீக்கொள மேல்மேல் மகிழ்தலின் நோக்கி

அருச்சனை வயலுள் அன்புவித்து இட்டுத்

தொண்ட உழவர் ஆரத் தந்த

அண்டத்து அரும்பெறல் மேகன் வாழ்க 95

 

கரும்பணக் கச்சைக் கடவுள் வாழ்க

அரும்தவர்க்கு அருளும் ஆதி வாழ்க

அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க

நிச்சலும் ஈர்த்தாட் கொள்வோன் வாழ்க

சூழ்இரும் துன்பம் துடைப்போன் வாழ்க 100

 

எய்தினர்க்கு ஆர்அமுது அளிப்போன் வாழ்க

கூர்இருள் கூத்தொடு குனிப்போன் வாழ்க

பேர்அமைத் தோளி காதலன் வாழ்க

ஏதிலர்க்கு ஏதில்எம் இறைவன் வாழ்க

காதலர்க்கு எய்ப்பினில் வைப்பு வாழ்க 105

 

நச்சு அரவு ஆட்டிய நம்பன் போற்றி

பிச்சு எமை ஏற்றிய பெரியோன் போற்றி

நீற்றொடு தோற்ற வல்லோன் போற்றி நாற்றிசை

நடப்பன நடாஅய்க் கிடப்பன கிடாஅய்

நிற்பன நிறீஇச் 110

 

சொல்பதம் கடந்த தொல்லோன்

உள்ளத் துணர்ச்சியிற் கொள்ளவும் படாஅன்

கண்முதல் புலனாற் காட்சியும் இல்லோன்

விண்முதல் பூதம் வெளிப்பட வகுத்தோன்

பூவில் நாற்றம் போன்றுயர்ந் தெங்கும் 115

 

ஒழிவற நிறைந்து மேவிய பெருமை

இன்று எனக்கு எளிவந்து அருளி

அழிதரும் ஆக்கை ஒழியச்செய்த ஒண்பொருள்

இன்றெனக் கெளிவந்து இருந்தனன் போற்றி

அளிதரும் ஆக்கை செய்தோன் போற்றி 120

 

ஊற்றிருந் துள்ளங் களிப்போன் போற்றி

ஆற்றா இன்பம் அலர்ந்தலை செய்யப்

போற்றா ஆக்கையைப் பொறுத்தல் புகலேன்

மரகதக் குவாஅல் மாமணிப் பிறக்கம்

மின்ஒளி கொண்ட பொன்னொளி திகழத் 125

 

திசைமுகன் சென்று தேடினர்க்கு ஒளித்தும்

முறையுளி ஒற்றி முயன்றவர்க்கு ஒளித்தும்

ஒற்றுமை கொண்டு நோக்கும் உள்ளத்து

உற்றவர் வருந்த உறைப்பவர்க்கு ஒளித்தும்

மறைத்திறம் நோக்கி வருந்தினர்க்கு ஒளித்தும் 130

 

இத்தந் திரத்தில் காண்டும் என்று இருந்தோர்க்கு

அத்தந் திரத்தில் அவ்வயின் ஒளித்தும்

முனிவு அற நோக்கி நனிவரக் கௌவி

ஆணெனத் தோன்றி அலியெனப் பெயர்ந்து

வாள்நுதல் பெண்என ஒளித்தும் சேண்வயின் 135

 

ஐம்புலன் செலவிடுத்து அருவரை தொறும்போய்த்

துற்றவை துறந்த வெற்று உயிர் ஆக்கை

அருந்தவர் காட்சியுள் திருந்த ஒளித்தும்

ஒன்று உண்டில்லை யென்றறி வொளித்தும்

பண்டே பயில்தொறும் இன்றே பயில்தொறும் 140

 

ஒளிக்கும் சோரனைக் கண்டனம்

ஆர்மின் ஆர்மின் நாண்மலர்ப் பிணையலின்

தாள்தளை இடுமின் சுற்றுமின் சூழ்மின்

தொடர்மின் விடேன்மின்

பற்றுமின் என்றவர் பற்றுமுற்று ஒளித்தும் 145

 

தன்நேர் இல்லோன் தானே ஆன தன்மை

என் நேர் அனையோர் கேட்கவந்து இயம்பி

அறைகூவி ஆட்கொண்டருளி

மறையோர் கோலம் காட்டி அருளலும்

உலையா அன்பு என்பு உருக ஓலமிட்டு 150

 

அலைகடல் திரையில் ஆர்த்து ஆர்த்து ஓங்கித்

தலை தடுமாறா வீழ்ந்துபுரண் டலறிப்

பித்தரின் மயங்கி மத்தரின் மதித்து

நாட்டவர் மருளவும் கேட்டவர் வியப்பவும்

கடக்களிறு ஏற்றாத் தடப்பெரு மதத்தின் 155

 

ஆற்றேன் ஆக அவயவம் சுவைதரு

கோற்றேன் கொண்டு செய்தனன்

ஏற்றார் மூதூர் எழில்நகை எரியின்

வீழ்வித்து ஆங்கு அன்று அருட்பெருந் தீயின்

அடியோம் அடிக்குடில் 160

 

ஒருத்தரும் வழாமை யொடுக்கினன்

தடக்கையின் நெல்லிக் கனியெனக் காயினன்

சொல்லுவது அறியேன் வாழி முறையோ

தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது

தெரியேன் ஆஆ செத்தேன் அடியேற்கு 165

 

அருளியது அறியேன் பருகியும் ஆரேன்

விழுங்கியும் ஒல்ல கில்லேன்

செழுந்தண் பாற்கடல் திரைபுரை வித்து

உவாக்கடல் நள்ளும்நீர் உள்அகம் ததும்ப

வாக்கு இறந்து அமுதம் மயிர்க்கால் தோறும் 170

 

தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊன்தழை

குரம்பை தோறும் நாய் உடல் அகத்தே

குரம்பைகொண்டு இன்தேன் பாய்த்தி நிரம்பிய

அற்புதம் ஆன அமுத தாரைகள்

எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது 175

 

உள்ளம் கொண்டோர் உருச்செய் தாங்கு எனக்கு

அள் ஊறு ஆக்கை அமைத்தனன் ஒள்ளிய

கன்னற் கனிதேர் களிறு எனக் கடைமுறை

என்னையும் இருப்பது ஆக்கினன் என்னில்

கருணை வான்தேன் கலக்க 180

 

அருளொடு பரா அமுது ஆக்கினன்

பிரமன் மால் அறியாப் பெற்றி யோனே. 182



தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...