google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: கலைஞரின் நாடகங்கள்

ஞாயிறு, 19 மார்ச், 2023

கலைஞரின் நாடகங்கள்

தமிழ் சொல்லுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு கலைஞரின் நாடகங்கள் ஒரு சாட்சி. நாடகங்களில் தான் சொல்ல விரும்பும் ஆழமான கருத்துக்களை எளிதில் பொது மக்களை கவரும் மேடையில் அமைப்பதில் அவர் வித்தகர்.  சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசியல் செய்திகள் போன்றவை அவரது நாடகங்களில் பின்னிப் பிணைந்திருக்கும். அடித்தள மக்களின் அவலக் குரல் அவரின் நாடகத்தில் எதிரொலித்தன இவையே பிற்காலத்தில் அவரது அரசியல் நோக்கங்களுக்கு துணை செய்தன.

நாடகத்தைப் பற்றி கலைஞர் கூறுகையில் “நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக் கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை அதனால்தான் அரசியல் கருத்துக்களை பண்பாடு கெடாமல் தரம் தாழாமல் அள்ளி தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தை கருவியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்றார்.

“தூக்குமேடை, மகான் பெற்ற மகான்” போன்றவை அவரது சமூக சீர்திருத்த நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுகள். அதேபோல் நச்சுக்கோப்பை, சாக்கிரட்டீசு போன்ற நாடகங்கள் மூடநம்பிக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்தன.

“குடிசைதான் ஒருபுறத்தே கூரிய வேல் வாள் வரிசையாய் வைத்திருக்கும்” எனத் தொடங்கும் புகழ்மிக்க வசனம் இடம்பெற்ற நாடகம் “பரப்பிரம்மம்”. புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தஞ்சை புயலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கலைஞர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், ராமாயணத்தை கிண்டல் செய்து எழுதிய பரதாயனம் போன்ற இலக்கிய நாடகங்கள் பலவற்றை கலைஞர் தனக்கே உரிய தனித்தன்மையுடன் எழுதினார்.

கலைஞரின் “திருவாளர் தேசியம்பிள்ளை” போன்ற நாடகம் தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் கட்சியை நையாண்டியுடன் விமர்சிப்பதாக அமைந்திருக்கும். திமுகவிற்கு உதயசூரியன் சின்னமாக கிடைத்த பிறகு அதனை பிரபலப்படுத்துவதற்காக “உதயசூரியன்” என்ற பெயரிலேயே நாடகம் ஒன்றை இயற்றினார் கருணாநிதி.  இப்படி நாடகத்தை சமூக மாற்றம், பகுத்தறிவு, போன்றவற்றுடன் தேர்தல் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாகவும் கலைஞர் திறமையுடன் கையாண்டார்.

கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழனியப்பன்’. இது, திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944-ம் ஆண்டு அரங்கற்றப்பட்டது. பின்னர் இந்த நாடகம் ‘நச்சுக்கோப்பை’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் அறங்கேற்றம் செய்யப்பட்டது.  ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’  உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர்.

‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஓர் இதழில், பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘பரப்பிரம்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதிய கலைஞர், அதை மாநிலம் முழுவதும் அறங்கேற்றம் செய்தார்.  1957-ம் ஆண்டு, தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக, ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதினார்.

நன்றி: kalaignar.dmk.in





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...