google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் பரிசு

வியாழன், 24 டிசம்பர், 2020

பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் பரிசு

 பொங்கல் பரிசு 

                                            -கா. ந. அண்ணாதுரை 

மதிப்புமிகு முதலாளி அவர்களுக்கு,

தங்களுக்குள்ள பலவிதமான வேலைத் தொந்தரவுகள், வியாபாரம் சம்பந்தமான வேலைகள், இவைகளுக்கிடையே இந்தக் கடிதம் எழுதி அனுப்புவதற்காக மன்னிக்கக் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ஏற்பட்டுவிட்டிருக்கிற சிக்கலைப் போக்கிட வேறு வழியோ, துணையோ, இடமோ, இல்லாத தால் தான் தங்களிடம் முறையிட்டுக் கொள்கிறேன்.

சென்ற மாதம் அலுவலகத்தின் செலவினத்தில் சிக்கனம் ஏற்படுத்தவேண்டும் என்ற திட்டத்தின்படி, வெளியூர்க் கடிதங்களையும், கணக்குகளையும் கவனித்து வந்தவரை நிறுத்தி விட்டு, அந்த வேலையையும் நானே பார்த்துக் கொள்ள வேண்டும் எனப் பணித்தீர்கள், அப்போது என் வேலை தங்கள் மனதிற்குத் திருப்தி அளித்திடுமானால் பொங்கல் இனாம் கணிசமான அளவு தருவதாகக் கூறி என்னை மகிழ்வித்தீர்கள்! நான் தங்களுடைய பெருந்தன்மை பற்றியும், கொடுத்த வாக்கை எப்படியும் நிறைவேற்றும் உயர் குணம் படைத்தவர் என்பது பற்றியும் விரிவாகவும், பெருமையுடனும் என் மனைவிக்கு எழுதினேன். அவளுக்குக் கடிதம் எழுதவேண்டிய அவசியம் வந்ததற்குக் காரணம், எனக்கு அவளிடம் இருந்து வந்த கடிதமே ஆகும். அது இது:

அன்புள்ள அப்பாவுக்கு, கமலி வணக்கம் கூறுவதாகத் தெரிவிக்கச் சொன்னாள். சென்ற வருஷம் பொங்கலுக்கு எப்படியும் வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்து ஏமாற்றம் அடைந்தது போல இந்த வருஷம் ஏற்படாது அல்லவா அம்மா என்று என்னைக் கேட்டாள். இந்த வருஷம் எப்படியும் அப்பா வருவார் என்று சமாதானம் செய்து வைத்தேன். நாலு வருஷத்துக்கு முன்பு வாங்கிய சந்தனக்கலர் பட்டுப் புடவையை எலி கடித்து நாசம் ஆக்கிவிட்டது. அந்தச் சேலையை நீ கட்டிக் கொண்டால் அழகாக இருக்கிறது என்று அப்பா சொன்னாரே அம்மா கவனம் இருக்கிறதா? என்று கமலி கேட்டாள்! எனக்கு கவனம் இருந்தால் என்ன பிரயோசனம்? அப்பாவுக்கல்லவா கவனம் இருக்க வேண்டும் என்று சொன்னேன். எலி செய்த வேலையை நீ அப்பாவுக்குத் தெரிவித்தால் கட்டாயம் சந்தனக் கலர் பட்டுப்புடவையை வாங்கி வருவார் என்று சொல்லி, அந்த புடவையைப் பற்றி வந்த விளம்பரத்தை இத்துடன் அனுப்பச் சொன்னாள். அந்த விளம்பரம் இதோ !

விலை மலிவு ! கண்கவர் வனப்பு !
பொன்னிற மேனிக்கு ஏற்ற
சந்தன நிற பட்டுச் சேலை.
அழுத்தம்! பளபளப்பு! அற்புத வேலைப்பாடு!
அஜந்தா - எல்லோரா ஸ்டோர், சென்னை.


கமலி எனக்கு எது பிடிக்கும் என்று அப்பாவுக்கே தெரியும். அவர் இஷ்டம் போல் வாங்கிக் கொண்டு வரட்டும். ஆனால் அத்தோடு பள்ளிக்கூடத்தில் நடைபெறும் பொங்கல் விழா நடனத்தின் போது நான் என்ன உடுத்திக்கொள்ள வேண்டுமென்று எட் மாஸ்டர் ஆர்டர் போட்டிருக்கிறார்கள் என்பதை எழுதி, வாங்கி வரச் சொல்ல வேண்டும் என்றாள். பள்ளிகூட எட்- மாஸ்டர் கமலிக்காக,

1.
பச்சைப் பட்டுச் சட்டை, சரிகை, புட்டா போட்டது.
2.
சிகப்புப் பட்டில் பாவாடை.
3.
இடுப்பிலே கட்டுவதற்காக சரிகைப் பட்டைத் துணி.
4.
காலில் போட்டுக் கொள்ள வெள்ளை நிறத்தில் லேடீஸ் ஷூ


வேண்டும் என்று எழுதி அனுப்பி இருக்கிறார்கள். பெரிய கம்பெனியில் மானேஜர் வேலை பார்க்கிறவர்க்கு இது ஒரு பிரமாதமா என்று பத்துப்பிள்ளைகள் எதிரில் வேறு அந்த அம்மாள் பேசிவிட்டு இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவு கண்டிப்பாக இருப்பதற்குக் காரணம் பள்ளிக்கூடத்துக்கு வரும் மேலதிகாரி ஒரு உத்தரவு அனுப்பியிருக்கிறார்.

அந்த உத்தரவில்,

பள்ளிக்கூட ஒழுங்கு : எட்- மாஸ்டர் பொறுப்பு


கல்விக்கூடம் சரஸ்வதி தேவி கொலு வீற்றிருக்கும் இடம். அங்கு அருவருப்பான காட்சி இருக்கவே கூடாது. அதிலும் பொங்கல் விழாவின் போது தங்க விக்கிரகங்கள் போல் ஜொலிக்க வேண்டும். இதைக் கவனித்தாக வேண்டும். இலவசக் கல்வியும், இலவச மதிய உணவும் தருகிறோம். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல துணியாவது தர வேண்டாமா? அதிலும் பொங்கல் திருவிழாவின்போது. இந்த வருஷம் பொங்கல் திருவிழாவைப் படம் (சினிமா) பிடிக்க ஏற்பாடாகி இருக்கிறது. ஆகையால் அழகான குழந் தைகளுக்கு நடனம், பாடல் கற்றுக் கொடுத்து அலங்காரமான தோற்றத்துடன் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.

இது முக்கியம், அவசியம், அவசரம்.

                                                                                                       - மேலதிகாரி.

மேலதிகாரி இதுபற்றிய பின் குறிப்பும் அனுப்பி இருக்கிறார். அதிலே அவருக்குக் கல்வி அமைச்சர் இலாகா அனுப்பி உள்ள முக்கிய அறிவிப்பைத் தெரிவித்திருக்கிறார். அந்த அறிவிப்பு என்னவென்றால்


கல்வி - சட்ட சபையில் கேள்வி


கல்வி மான்ய விவாதத்தின்போது சட்டமன்ற உறுப்பினர் சவுரியப்பா, 'நமது நாட்டுக் குழந்தைகள் விழாவைப் படமாக்கி (சினிமா) வெளிநாடுகளுக்கு அனுப்ப உத்தேசம் உண்டா' எனக் கேட்டார்.

அமைச்சர் அரிமா நாதர் "ஆம்!" என்று பதிலளித்தார்.

சட்டசபையில் கூறப்பட்டதை மெய்ப்பித்தாக வேண்டிய பொறுப்பில் கல்விக் கூடங்கள் சர்க்காருடன் ஒத்துழைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இது வேண்டுகோள் வடிவத்தில் வெளியிடப்படும் உத் திரவாகக் கொள்ளலாம்.

சர்க்காரை ஒரு பொறுப்பிலே சிக்க வைக்கும் கேள்வியைச் சவுரியப்பன் கிளப்பியதற்குக் காரணம், அவர் சென்ற வருஷம் தமது அமெரிக்கப் பயணத்தைப்பற்றி 'சினிமாவும், சிறுவர் சிறுமியரும்' என்ற தலைப்பில் வெளியிட்ட கட்டுரையை அமெரிக்க இதழ்கள் வெகுவாகப் பாராட்டியதே யாகும். அமெரிக்க இதழ்கள் பாராட்டியதற்குக் காரணம் சோவியத் அரசாங்கம் அமெரிக்காவுக்கு வெறும் வியாபார நோக்கத்தான் முக்கியம் என்று குற்றம் சாட்டியதாகத் தெரிகிறது. சோவியத் அரசாங்கம், அமெரிக்காவின் வியாபார நோக்கத்தைப் பற்றி எழுதுகையில்:- ஒவ்வொரு துறையிலும் அமெரிக்கா நுழைந்து இலாப வேட்டை ஆட புதுப்புது (தொழில்) கம்பெனி நடத்துகிறது. அமெரிக்காவுக்கு இந்தியாவின் கலை - கலாச்சாரம் - - கல்வி குழந்தைகள் நிலைமை ஆகியவை பற்றிய அக்கரை துளியும் இல்லை. தங்கள் நாட்டுச் சரக்கை இந்தியாவில் விற்கும் நோக்கம்தான் அதிகமாகி விட்டிருக்கிறது. போன மாதத்திலேகூட, சென்னையில் உள்ள சென்ட்டினரி கம்பெனியாருடன் அமெரிக்காவிலுள்ள ஜான் அண்டு சன் அண்டு ஜான் கம்பெனியார் கூட்டாகச் சேர்ந்து எலக்ட்ரிக் குத்து விளக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைக்க ஏழு கோடி ரூபாய் மூலதனப் பங்கு போட முன் வந்திருக்கிறது. இந்த சென்ட்டினரி கம்பெனி அமெரிக்க எண்ணெய்க்கு ஏஜன்சி எடுத்துள்ள எம்பெருமான் அவர்களுடையது என்பது தெரிந்ததே.

இந்தச் 'சேதி' சோவியத்துக்கு எட்டியதற்கும், அதைத் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டதற்கும் காரணம், சென்ட்டினரி எம்பெருமான் கம்பெனியில் ஆள் குறைப்புச் செய்தது பற்றிய கண்டனக் கூட்டத்தில் 'பேத ஒழிப்பு ஆசிரியர் முழுமதி அவர்களின் முழக்கம் என்று கூறப்படுகிறது. முழுமதி தமது பேச்சில், இந்த வருஷம் கூட எம்பெருமான் பொங்கல் போனஸ் கொடுக்காவிட்டால், உள்ளிருப்பு வேலை நடை பெறும் என்று தெரிவித்திருப்பதால், எம்பெருமான் போனஸ் கொடுக்கத் தவறமாட்டார் என்று 'பொறி' என்ற தினசரி தலையங்கம் எழுதியிருக்கிறது. எனவே, கம்பெனியில் போனஸ் கிடைக்கும் என்று தெரிவதால்,

1.
அம்மாவுக்கு (எங்க) நார்ப்பட்டு சேலை - மஞ்சள் நிறம்.
2.
உங்க மச்சினன் (இங்கேதான் வந்திருக்கிறார்) பிரியமாகப் போட்டுக் கொள்ளும் ஸ்லாக்'
3.
குழந்தைக்குக் கக்குவான் மருந்து.
4.
எனக்கு டானிக் (முன்பு டாக்டர் முரளி எழுதிக் கொடுத்தது).
இவைகளை வாங்கிக் கொண்டு வரச் சொல்லி எழுதம்மா என்று கமலி கிட்டிபோட்டாள். எழுதிவிட்டேன். உங்கள் இஷ்டம். நாங்கள் இங்கே இருக்கிறோம் என்ற நினைப்பாவது இருக்கிறதோ என்று எனக்குச் சந்தேகம். அப்பாவை அப்படி 'அல்ப சொல்பமாக, எண்ணாதே என்று கமலி அடித் துச் சொல்கிறாள். பார்ப்போம். யார் ஜோதிடம் பலிக்கிறது என்பதை.


                                                                             இப்படிக்குத் தங்கள் பார்யாள்,

                                                                              இ. சுந்தரி (இன்ட்ட ர்)


இந்தக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலாளியின் அந்தரங்கக் காரியதரிசி கீழ்க்கண்ட கடிதத்தை அனுப்பினார்


மனு - போனஸ்:

1. கடிதத்தின் விரிவையும் அதில் உள்ள பல விஷயங்களையும் பார்க்கும்போது மனுதாரர் ஆபீஸ் வேலையை ஒழுங்காகக் கவனிக்காமல், தமது சொந்த வேலைகளையே பெரிதும் கவனிப்பது தெரிகிறது.
2.
மனுதாரர் தமது நீண்ட கடிதத்திற்கு ஆபீஸ் காகிதத்தை உபயோகப் படுத்தியிருக்கிறார். இது கம்பெனி சொத்தை துர்விநியோகம் செய்வதாக ஆகிறது. இந்தக் குற்றங்களுக்காக ஏன் அவர் மீது (கம்பெனி ஒழுங்குவிதி 76ன் படி) நடவடிக்கை எடுக்கக் கூடாது என்பதற்கான பதிலை மூன்று மணி நேரத்திற்குள் தெரிவிக்க உத்திரவிடப் பட்டிருக்கிறது.


                       -முதலாளி எம்பெருமான் அவர்களுக்காக

                         மோதி (அந்தரங்கக் காரியதரிசி, டெம்பரரி)

இந்தக் கடிதம் கிடைத்த இரண்டு மணி நேரத்திற்கெல்லாம் கீழ்க்கண்ட தந்தி . சுந்தரி (இன்ட்டர்)க்கு சென்னை இலவச மருத்துவ மனையிலிருந்து அனுப்பப்பட்டது.

கணவர் பிளட் பிரஷர்! பெரிய டாக்டர் லீவ்! உடனே வேறு இடம் ஏற்பாடு செய்யவும்.

 

                                                                                             -அசிஸ்ட்டெண்டு டாக்டர்.

 

*****


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...