google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil: பாப்பாப் பாட்டு

ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

பாப்பாப் பாட்டு

ஓடி விளையாடு பாப்பா! - நீ
      ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!
கூடிவிளையாடு பாப்பா! - ஒரு
      குழைந்தையை வையாதே பாப்பா!.       1

சின்னஞ் சிறுகுருவி போலே - நீ
      திரிந்து பறந்துவா பாப்பா!
வன்னப் பறவைகளைக் கண்டு - நீ
      மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!       2

கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்
      கூட்டி விளையாடு பாப்பா!
எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு
      இரக்கப் படவேணும் பாப்பா!       3

பாலைப் பொழிந்து தரும், பாப்பா! - அந்தப்
      பசுமிக நல்லதடி பாப்பா!
வாலைக் குழைத்துவரும் நாய்தான் - அது
      மனிதர்க்குத் தோழனடி பாப்பா!       4

வண்டி இழுக்கும் நல்ல குதிரை, - நெல்லு
      வயலில் உழுதுவரும் மாடு,
அண்டிப் பிழைக்கும் நம்மை ஆடு, - இவை
      ஆதரிக்க வேணுமடி பாப்பா!       5

காலை எழுந்தவுடன் படிப்பு - பின்பு
      கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
மாலை முழுதும் விளையாட்டு - என்று
      வழக்கப் படுத்திக்கொள்ளு பாப்பா!       6

பொய்சொல்லக் கூடாது பாப்பா! - என்றும்
      புறஞ்சொல்ல லாகாது பாப்பா!
தெய்வம் நமக்குத்துணை பாப்பா! - ஒரு
      தீங்குவர மாட்டாது பாப்பா!       7

பாதகஞ் செய்பவரைக் கண்டால் - நாம்
      பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா! - அவர்
      முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!       8

துன்பம் நெருங்கிவந்த போதும் - நாம்
      சோர்ந்துவிட லாகாது பாப்பா!
அன்பு மிகுந்த தெய்வ முண்டு - துன்பம்
      அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!       9

சோம்பல் மிகக்கெடுதி பாப்பா! - தாய்
      சொன்ன சொல்லைத் தட்டாதே பாப்பா!
தேம்பி யழுங்குழந்தை நொண்டி - நீ
      திடங்கொண்டு போராடு பாப்பா!       10

தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
      தாயென்று கும்பிடடி பாப்பா!
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
      ஆன்றோர்கள் தேசமடி பாப்பா!       11

சொல்லில் உயர்வுதமிழ்ச் சொல்லே - அதைத்
      தொழுது படித்திடடி பாப்பா!
செல்வம் நிறைந்த ஹிந்துஸ் தானம் - அதைத்
      தினமும் புகழ்ந்திடடி பாப்பா!       12

வடக்கில் இமயமலை பாப்பா! - தெற்கில்
      வாழும் குமரிமுனை பாப்பா!
கிடக்கும் பெரிய கடல் கண்டாய் - இதன்
      கிழக்கிலும் மேற்கிலும் பாப்பா!       13

வேத முடையதிந்த நாடு - நல்ல
      வீரர் பிறந்த திந்த நாடு
சேதமில் லாதஹிந்துஸ் தானம் - இதைத்
      தெய்வமென்று கும்பிடடி பாப்பா!       14

சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
      தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி,உயர்ந்தமதி,கல்வி - அன்பு
      நிறைய உடையவர்கள் மேலோர்.       15

உயிர்க ளிடத்தில் அன்பு வேணும் - தெய்வம்
      உண்மையென்று தானறிதல் வேணும்
வயிர முடைய நெஞ்சு வேணும் - இது
      வாழும் முறைமையடி பாப்பா!       16 

            _மகாகவி சுப்ரமணிய பாரதியார் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தங்களின் மேலான கருத்தைப் பதியவும்.

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம்

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை பற்றிய கலைஞர் கடிதம், முரசொலி 22-ஏப்ரல்-2012 உடன்பிறப்பே, பேரவையில்  நியாயமான  பிரச்சினைகளை எழுப்புவதற்கும், அவதூ...