google.com, pub-9220471781781135, DIRECT, f08c47fec0942fa0 Tamil

புதன், 1 டிசம்பர், 2021

பன்னிரண்டாம் திருமுறை_சேக்கிழார்

உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்.

எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம் அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும், அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம்.
வாழ்த்துவதற்கு வயது தேவையில்லை. நாம் கடவுளையேகூட வாழ்த்தலாம். கடவுள் வாழ்த்தை சமஸ்கிருதத்தில் காயத்ரி என்பர். 

We don't need age to greet. We can even praise God. 

வியாழன், 18 நவம்பர், 2021

முலையளவே ஆகுமாம் மூப்பு

 நல்வழி வெண்பா: 39

பெண்பாற் புலவர் அவ்வையார் அருளியது 

பாடல்: 

முப்பது ஆண்டிற்குள் முதல்வனை யறி
முப்பதாம் ஆண்டளவில் மூன்றற்று ஒருபொருளைத்
தப்பாமல் தன்னுள் பெறானாயின்-செப்புங்
கலையளவே ஆகுமாம் காரிகையார் தங்கள்
முலையளவே ஆகுமாம் மூப்பு.

விளக்கம்:

ஒருவன் எவ்வளவு கல்வி கற்றாலும், முப்பது வயதிற்குள் ஆணவம், கண்மம், மாயை என்ற மும்மலங்களை கடந்து இறைவனை உணராமல் இருந்தால், அவன் கற்ற கல்வி வயதான பெண்களுக்கு உள்ள மார்பகங்கள் அவள் கணவனுக்கும், அவர்களின் குழந்தைக்கும் பயன்படாமல் வெறும் பெயர் அளவுக்கு இருக்கும் உறுப்பைப் போல, அவன் கற்ற கல்வி ஒன்றுக்கும் பயன்படாமல் வெறும் கல்வி என்று தான் இருக்கும். அதனால் பயனேதும்இல்லை.


கோபம் மூன்று வகை

ஔவையார் பாடிய மூதுரை 23

பாடல் :

கற்பிளவோ டொப்பர் கயவர் கடுஞ்சினத்துப்
பொற்பிளவோ டொப்பாரும் போல்வாரே-விற்பிடித்து
நீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே
சீரொழுகு சான்றோர் சினம்.  

எளிமைப் படுத்தப்பட்ட பாடல் :

கல் பிளவோடு ஒப்பர் கயவர் 
கடுஞ்சினத்துப் 
பொன் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே 
வில் பிடித்து 
நீர் கிழிய எய்த வடுப்போல 
மாறுமே 
சீர் ஒழுகு சான்றோர் சினம்.

பொருள்:

பிளந்த கல் மீண்டும் தானே ஒட்டிக்கொள்ளாது. அதுபோல, பிரிந்த கயவர்கள் மீண்டும் ஒன்றுசேர மாட்டார்கள்.

பிரிந்த தங்கத் துகள்கள் ஒட்டிக்கொள்வது போலக் கடுமையான கோபத்தில் பிரிந்து மீண்டும் ஒட்டிக்கொள்பவர்களும் இருக்கிறார்கள்.

வில்லைப் பிடித்து எய்த அம்பு பாய்ந்தாலும் தண்ணீர் ஒட்டிக்கொள்வது போலச் சீர்மை ஒழுகும் சான்றோர் சினம் மாறிவிடும்.

புதன், 17 நவம்பர், 2021

இன்பமுடன் வாழ்பவர் யார்?

ஏலாதி 53

கடம் பட்டார், காப்பு இல்லார், கைத்து இல்லார், தம் கால்
முடம் பட்டார், மூத்தார், மூப்பு இல்லார்க்கு உடம் பட்டு,
உடையராய் இல்லுள் ஊண் ஈத்து, உண்பார் - மண்மேல்
படையராய் வாழ்வார், பயின்று.


பொருள்:
கடன்பட்டவர்களுக்கும், தம்மைக் காப்பவர் ஒருவரும் இல்லாதவர்களுக்கும், பொருளில்லாதவர்கட்கும், தங்கால் முடம்பட்டவர்க்கும், முதிர்ந்தவர்களுக்கும், பெற்றோர் முதலிய பெரியார்க ளில்லாதவர்க்கும், மனமியைந்து அன்புடையவர்களாய்த் தம் வீட்டில் உணவு கொடுப்பித்து உண்பவர், பூமியின்மீது நால்வகைப் படைகளையுமுடைய மன்னர்களாய் மனைவி மக்களுடன் கூடி இன்பமுடன் வாழ்வார்கள்.

கருத்து: கடன்பட்டவர் முதலானவர்க்கு உணவு கொடுத்து உதவி செய்பவர், மன்னராய் இன்பம் மிக்கு வாழ்வார்.

நாலடியார் 354

கயமை

கோடேந்து அகல் அல்குல் பெண்டிதர்தம் பெண்ணீர்மை
     சேடியர் போலச் செயல்தேற்றார்; - கூடிப்
     புதுப்பெருக்கம் போலத்தம் பெண்ணீர்மை காட்டி
     மதித்திறப்பர் மற்றை யவர்.

பொருள்: 
பக்கங்கள் உயர்ந்து அகன்ற அல்குலையுடைய நற்குலப் பெ ண்கள், விலைமகளிரைப் போல தமது பெண் தன்மையை ஒப்பனை செய்துகொள்ள அறியார். ஆனால் பொது மகளிரோ புதிய வெள்ளம் போல ஆடவருடன் கூடிக் கலந்து தமது பெண்தன்மை மேம்படப் புனைந்து காட்டி அவர்களிடம் உள்ள பொருளைக் கவர்ந்து கொண்டு விலகிச் செல்வர்.

விளக்கம்: 
குலப்பெண்கள் மற்றவர் வியக்கும்படி தம்மை அழகுபடுத்திக்கொண்டு பிறர் பொருளைப் பறிப்பதில்லை, வேசிகளே அப்படிச் செய்வார்கள்; அதைப் போல நல்லவர்கள் தம்மைக் வெளிக்காட்டிக் கொள்ளாமல் அடங்கியிருப்பார்கள். கயவர்களோ  தம்மை மேம்படுத்தி நடித்துக் காட்டி வஞ்சித்துப் பொருள் பறித்துக் கொண்டு போவார்கள்.

கயவர்கள், வேசியர்களைப் போல வஞ்சித்துப் பொருள் கொள்வர் என்பது கருத்து.

செவ்வாய், 16 நவம்பர், 2021

திருக்குறள் 622

மு.கருணாநிதி உரை:

வெள்ளம் போல் அளவற்றதாய் வரும் துன்பமும், அறிவுடையவன் தன் உள்ளத்தினால் அத் துன்பத்தின் இயல்பை நினைத்த அளவில் கெடும்.



வெள்ளம் போலக் கரை கடந்த துன்பம் வந்தாலும் அறிவு உடையவன், தன் மனத்தால் தளராமல் எண்ணிய அளவிலேயே அத்துன்பம் அழியும்.



வெள்ளத்தில் முழ்கும் அளவு வரும் தொல்லைகள், அறிவு உடையவர்களின் மனதின் எண்ணத்தினாலேயே அழிந்துவிடும்.

Though sorrow, like a flood, comes rolling on,
When wise men's mind regards it,- it is gone.

ஞாயிறு, 14 நவம்பர், 2021

இனிமையான வாழ்க்கை எப்போது அமையும்?

 தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்

கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்

கேளாக வாழ்தல் இனிது.

 

நூல்: திரிகடுகம்

ஆசிரியர்: நல்லாதனார்

பாடல் எண்: 12

கருத்து:

முயற்சியை ஆளக் கூடிய திறமையுடைய ஒருவன் பிறருக்கு கடன்படாது வாழ்பவன் ஆவான்.பயிர்த்தொழில் புரிந்து,சமூகத்திற்கே உதவியாக இருப்பவன், விருந்தினர் காத்திருக்க, தான் மட்டும் உண்ணாதவன்ஆவான். ஒற்றாடலில் சிறந்தவன், பிறரின் காரியங்களை, கருத்துக்களை அறிந்து சொல்பவன், சிறிதுகூட மறதி இல்லாதவன்ஆவான். இம்மூன்று இயல்புடையவர்களையும் நண்பர்களாகப் பெற்று வாழ்தல் இனிமையாகும்.

அருஞ்சொற்பொருள்:

தாளாளன்-முயற்சியைக் கொண்டிருப்பவன் ; வேளாளன் - உதவி செய்பவன், பயிர்த்தொழில் புரியும் ஒருவன் ; கோளாளன் - ஒற்றாடல் திறனில் வல்லவன்,பிறரின் காரியங்களை மனதில் கொண்டவன் ; கேள் – நட்பு


சிவபெருமான் எமனை உதைத்தார்

  திருக்கடையூரில் சிவபெருமான் மார்க்கண்டேயனைக் காக்க எமனை உதைத்த வீரட்ட நிகழ்வு  மிருகண்டு முனிவருக்கும் அவரது மனைவி மருத்துவதிக்கும் பல கால...