வியாழன், 30 மார்ச், 2023
திங்கள், 27 மார்ச், 2023
நக்கீரரைச் சோதித்த சிவபெருமான்
கற்கிமுகி என்ற பூதம் சிவபூஜையில் தவறு செய்த 999 பேரை பிடித்து ஒரு குகையில் வைத்திருந்தது. யாராவது ஒருவர் சிவ பூஜையின் போது கவனத்தை இழந்து மனதை வேறுபக்கம் செலுத்தினால் அந்தப் பூதம் பிடித்துவிடும். ஆயிரம் பேரைப் பிடித்தவுடன் அனைவரையும் சாப்பிட அந்த பூதம் திட்டமிட்டிருந்தது.
நக்கீரர், தன் உடலில் தோன்றிய நோய் அகல சிவபூஜை செய்து கொண்டிருந்தார். இவரைச் சோதிக்க விரும்பினார் சிவன்.
நக்கீரர் தவம் செய்த இடத்திலிருந்த ஆலமரத்திலிருந்து ஒரு இலை கீழே விழுந்தது. அருகில் ஒரு நீர்நிலை இருந்தது. இலையின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி கரையிலும் இருந்தது. நீரிலுள்ள பாதி மீனாகவும் தரையிலிருந்த பாதி பறவையாகவும் காட்சிதந்தது. இது நக்கீரருக்கு வியப்பை ஏற்படுத்தியது. ஆதைக் கவனித்ததால், சிவ பூஜையிலிருந்து அவரது கவனம் திசை திரும்பியது. காத்துக் கொண்டிருந்த கற்கிமுகி பூதம், நக்கீரரைக் கவ்விப் பிடித்து குகைச் சிறையில் அடைத்தது. அவரைப் பார்த்தவுடன், அங்கிருந்த 999 சிறைக்கைதிகளும் ஓவென்று கதறினர். காரணத்தை வினவியபோது நக்கீரர்தான் ஆயிரமாவது ஆள் என்றும், ஆயிரம் பேர் வந்தவுடன் சாப்பிடப் போவதாகப் பூதம் சொன்னது என்றும் கூறினர்.
உடனே நக்கீரர், அஞ்சற்க, நான் என் பிரார்த்தனையின் மூலம் உங்களை விடுவிப்பேன் என்று சொல்லி இறைவனைத் துதித்தார். அப்பொழுது அவர் முருகன் மீது பாடிய பாடல்தான் திருமுருகாற்றுப்படை என்னும் சங்க இலக்கிய நூலாகும்.
இந்த நேரத்தில் , வெளியே குளிக்கச் சென்ற கற்கிமுகி பூதம் திரும்பிவந்தது. முருகனைத் துதித்த நக்கீரர், ஒரு இலையை அதன்மீது தூக்கி எறிந்தார். அது வேலாக உருமாறி பூதத்தை வதைத்தது.
இந்த நிகழ்ச்சி மதுரை அருகிலுள்ள திருப்பரங்குன்றத்தில் நடந்ததாக ஐதீகம்.
ஞாயிறு, 19 மார்ச், 2023
கலைஞரின் நாடகங்கள்
தமிழ் சொல்லுக்கு அளப்பரிய ஆற்றல் இருக்கிறது என்பதற்கு கலைஞரின் நாடகங்கள் ஒரு சாட்சி. நாடகங்களில் தான் சொல்ல விரும்பும் ஆழமான கருத்துக்களை எளிதில் பொது மக்களை கவரும் மேடையில் அமைப்பதில் அவர் வித்தகர். சமூக சீர்திருத்தம், மூடநம்பிக்கை ஒழிப்பு, அரசியல் செய்திகள் போன்றவை அவரது நாடகங்களில் பின்னிப் பிணைந்திருக்கும். அடித்தள மக்களின் அவலக் குரல் அவரின் நாடகத்தில் எதிரொலித்தன இவையே பிற்காலத்தில் அவரது அரசியல் நோக்கங்களுக்கு துணை செய்தன.
நாடகத்தைப் பற்றி கலைஞர் கூறுகையில் “நாடக இலக்கியம் போல விரைந்து மனமாற்றம் உண்டாக்கக் கூடிய ஆற்றல் வேறு எதற்கும் இல்லை அதனால்தான் அரசியல் கருத்துக்களை பண்பாடு கெடாமல் தரம் தாழாமல் அள்ளி தெளிப்பதற்கு நாடக இலக்கியத்தை கருவியாக பயன்படுத்திக் கொண்டேன்” என்றார்.
“தூக்குமேடை, மகான் பெற்ற மகான்” போன்றவை அவரது சமூக சீர்திருத்த நாடகங்களுக்கு எடுத்துக்காட்டுகள். அதேபோல் நச்சுக்கோப்பை, சாக்கிரட்டீசு போன்ற நாடகங்கள் மூடநம்பிக்கை எதிர்த்து பிரச்சாரம் செய்தன.
“குடிசைதான் ஒருபுறத்தே கூரிய வேல் வாள் வரிசையாய் வைத்திருக்கும்” எனத் தொடங்கும் புகழ்மிக்க வசனம் இடம்பெற்ற நாடகம் “பரப்பிரம்மம்”. புறநானூற்றுப் பாடலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தஞ்சை புயலில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு கலைஞர் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனைத் தொடர்ந்து சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், ராமாயணத்தை கிண்டல் செய்து எழுதிய பரதாயனம் போன்ற இலக்கிய நாடகங்கள் பலவற்றை கலைஞர் தனக்கே உரிய தனித்தன்மையுடன் எழுதினார்.
கலைஞரின் “திருவாளர் தேசியம்பிள்ளை” போன்ற நாடகம் தேர்தல் பிரச்சாரத்திற்காக, காங்கிரஸ் கட்சியை நையாண்டியுடன் விமர்சிப்பதாக அமைந்திருக்கும். திமுகவிற்கு உதயசூரியன் சின்னமாக கிடைத்த பிறகு அதனை பிரபலப்படுத்துவதற்காக “உதயசூரியன்” என்ற பெயரிலேயே நாடகம் ஒன்றை இயற்றினார் கருணாநிதி. இப்படி நாடகத்தை சமூக மாற்றம், பகுத்தறிவு, போன்றவற்றுடன் தேர்தல் அரசியல் பிரச்சாரத்திற்கான கருவியாகவும் கலைஞர் திறமையுடன் கையாண்டார்.
கலைஞர், முதன்முதலில் எழுதி அரங்கேற்றிய நாடகம், ‘பழனியப்பன்’. இது, திருவாரூர் பேபி டாக்கீஸில், 1944-ம் ஆண்டு அரங்கற்றப்பட்டது. பின்னர் இந்த நாடகம் ‘நச்சுக்கோப்பை’ என்ற பெயரில், தமிழகம் முழுவதும் அறங்கேற்றம் செய்யப்பட்டது. ‘தூக்குமேடை’, ‘பரப்பிரம்மம்’, ‘சிலப்பதிகாரம்’, ‘மணிமகுடம்’, ‘ஒரே ரத்தம்’, ‘காகிதப்பூ’, ‘நானே அறிவாளி’, ‘வெள்ளிக்கிழமை’, ‘உதயசூரியன்’, ‘திருவாளர் தேசியம்பிள்ளை’, ‘அனார்கலி’, ‘சாம்ராட் அசோகன்’, ‘சேரன் செங்குட்டுவன்’,‘நாடகக் காப்பியம்’, ‘பரதாயணம்’ உட்பட 21 நாடகங்களை எழுதியுள்ளார் கலைஞர்.
‘பராசக்தி’ திரைப்படம் வெளியானபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஓர் இதழில், பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடப்பட்டது. இதையடுத்து, ‘பரப்பிரம்மம்’ என்ற பெயரில் நாடகம் எழுதிய கலைஞர், அதை மாநிலம் முழுவதும் அறங்கேற்றம் செய்தார். 1957-ம் ஆண்டு, தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக, ‘உதயசூரியன்’ என்ற நாடகத்தை எழுதினார்.
நன்றி: kalaignar.dmk.in
மிகவும் அரிதான சிற்பம்
அபூர்வமான சிலை வடிவம்
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள கயிலாசநாதர் கோவிலில் அமைந்திருக்கும் வித்தியாசமான திருக்கோலம் இது.மும்மூர்த்திகளும், ஒரே சிலையில் காட்சியளிப்பது அபூர்வமான விஷயமாகும். அதிலும் லிங்க வடிவில் இருக்கும் சிவபெருமானின் ஆவுடையாராக மாறியிருக்கிறார், மகாவிஷ்ணு. பிரம்மதேவனும் கூட, நான்முகனாக மாறுவதற்கு முன்பு இருந்த ஐந்து முகங்களுடன் காட்சியளிக்கிறார்.
விஷ்ணுவும், பிரம்மனும், சிவபெருமானின் அடியையும், முடியையும் தேடினர். அது இயலாமல் போனதால் இருவரும் சிவனை பூஜிக்க, அவர் சிவலிங்க வடிவில் இருவருக்கும் காட்சியளித்தார். அடி முடி தேடிய வரலாற்றை எடுத்துரைக்கும் வகையிலேயே, அடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணு, சிவலிங்கத்தின் அடியில் ஆவுடையாராக மாறியிருக்கிறார். அதே போல் முடியைத் தேடிச் சென்ற பிரம்மன், சிவலிங்கத்தின் மேற்பகுதியை தன்னுடைய கையில் தழுவியபடி காட்சியளிக்கிறார்.